ஐஜேகேவில் குடும்ப அரசியல் இல்லையா? பாரிவேந்தர் கொடுத்த தரமான விளக்கம்!
சென்னை: ஐஜேகே தலைவராக தனது மகன் பதவி வகிப்பது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னதாக ஐஜேகே என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் பாரிவேந்தர். அதற்கு முன்னதாக அவர் வேறு எந்தக் கட்சியிலும் உறுப்பினராகக்கூட இருந்ததில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு எந்த அரசியல் சார்பு இல்லாத ஒரு பொதுவான மனிதராகவே அடையாளம் காணப்பட்டார். திடீரென்று அவர் அரசியல் பிரவேசம் செய்தார்.
அதன்பிறகு அவர் கட்சி 2014இல் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ,மீண்டும் 2019இல் பாஜக கூட்டணியிலிருந்த இவரது கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை.

அதனால், திமுக கூட்டணியில் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதன்பின்னர் மீண்டும் இப்போது பாஜக கூட்டணியில் இணைந்து அதே பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் ஊழல் இல்லாத ஆட்சி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதைப் போலவே குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார். ஆனால், ஐஜேகே கட்சியின் தலைவராக இவரது மகன் ரவி பச்சமுத்து தான் இருந்து வருகிறார்.
குடும்ப அரசியலை எதிர்த்து குரல் கொடுக்கும்போது அவரது கட்சியின் தலைவராக மகனை நியமித்திருப்பது மட்டும் சரியா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான விமர்சனங்களுக்கு முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார் பாரிவேந்தர்.

இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், "நான் 13 வருடங்களுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்தேன். எனக்குப் பின்னால் எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். அதில் யாருமே தேசிய பார்வையோடு கட்சியை ஆரம்பிக்கவில்லை. அவர்களின் கட்சிக்கு யாரும் இந்தியாவை முன்னிறுத்திப் பெயர் வைக்கவில்லை.
நான் 'இந்திய ஜனநாயகக் கட்சி' என்று பெயர் வைத்தேன். நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டை முன்னிறுத்தி கட்சிக்குப் பெயர் வைத்திருக்கலாம்.
எங்களது முக்கிய கொள்கை என்ன தெரியுமா? குடும்ப ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும். இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண்களுக்குச் சம உரிமைக் கொடுக்கப்பட்ட வேண்டும். யாரும் அரசுப் பதவிகளில் 2முறைக்கு மேல் வகிக்கக் கூடாது.
விவசாய குடும்பத்தில் பிறந்த, படித்த ஒருவர் தமிழ்நாட்டை ஆள வேண்டும். மது முழுமையாக ஒழிக்கப்பட்ட வேண்டும். இதுதான் எங்களின் முக்கியமான கொள்கை.
நாங்கள் குடும்ப அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், என் கட்சியின் தலைவராக எனது மகன் இருப்பதை உடனே சுட்டிக் காட்டுகிறார்கள். அது ஒரு தவறான புரிதல்.
குடும்பமே சேர்ந்து கட்சி நடத்தலாம். கட்சியில் இருக்கலாம். அதனால் அதிகாரம் வந்துவிடாது. எப்போது ஆட்சி அதிகாரம் வருகிறதோ அதில்தான் குடும்ப ஆதிக்கம் இருக்கக் கூடாது.
கட்சியில் குடும்பத்தினர் இருப்பதால், செலவுதான் அதிகம். அதனால் ஒரு பைசா வருமானம் வராது. நாங்கள்தான் கட்சிக்குச் செலவழிக்க வேண்டும்.

ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக, முதலமைச்சராக, எம்பியாக அரசு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதே எங்களின் கொள்கை. மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சம்பளம் பெறக் கூடாது. அதற்குப் பெயர்தான் குடும்ப அரசியல்.
ஒரு கட்சியில் குடும்பமே இருக்கிறது என்றால், அது குடும்ப அரசியல் அல்ல. அது ஒரு தவறான கருத்து.
என்னைப் பொறுத்தவரை அரசியலிலிருந்து நான் சம்பாதித்து வீட்டுக் கொண்டு போவதற்காகக் கட்சி தொடங்கவில்லை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகே தமிழ்நாட்டு மக்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை.
நான் ஒரு பல்கலைக் கழகம் நடத்துகிறேன். மருத்துவமனை நடத்துகிறேன். அதில் தன்னிறைவு பெற்ற பிறகு, மக்களுக்குச் சேவை செய்ய அரசியலுக்கு வருகிறேன். அரசியல் மூலம் பணம் சம்பாதிப்பது எனது நோக்கமில்லை.
என்னை வாழவைத்த மக்களுக்குத் திரும்பச் செய்கின்ற காலம் வந்துவிட்டது என நினைத்து சேவை செய்ய அரசியல் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
மத்திய அரசு கொடுத்த நிதியை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன். அது போக என நிறுவனங்களில் நிதியிலிருந்து கிட்டத்தட்ட 126 கோடியைப் பெரம்பலூர் மக்களுக்குச் செலவு செய்திருக்கிறேன்.
1200 ஏழை மாணவர்களை இந்த 5 ஆண்டுகளில் இலவசமாகப் படிக்க வைத்து பட்டதாரியாக்கி இருக்கிறேன். இப்படிச் செய்த ஒரே ஒரு எம்பி தமிழ்நாட்டில் காட்டுங்கள் பார்ப்போம்? யாருமே இல்லையே?

எல்லாம் மக்கள் வரிப் பணத்தை ஊழல் செய்து, கொள்கை அடித்து அதன் மூலம் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். மக்களின் வரிப் பணத்தில் நான் ஊழல் செய்யவில்லை. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு ஊழல் வழக்கில் பல முதல்வர்கள் சிறைக்குச் செல்கிறார்கள். பலர் மீது அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. வருமான வரித்துறை வழக்குகள் உள்ளன. ஊழல் செய்தால், சிறை உறுதி என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு வந்துள்ளது.
ஆகவே, ஊழலற்ற, லட்ச லாவண்யம் அற்ற ஆட்சி வர வேண்டும். மக்கள் அதை நோக்கிப் போக ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எனது சேவையைப் புரிந்து கொள்வார்கள்.
கடந்த முறை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். முன்பு அதிமுகவை மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டேன். இந்த முறை அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிடுகிறேன்.
இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. கூடவே சீமான் போன்ற வளர்ந்து வரும் கட்சிகளும் களத்தில் உள்ளன. அவை வாக்குகளைப் பிரிக்கும். பாஜக மற்றும் ஐஜேகே பலத்தை மட்டுமே நம்பி போட்டியிடும் நான் முன்பு போல 4 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது முடியாது.
ஏனென்றால் வாக்குகள் பிரிந்துள்ளன. அதற்கு ஏற்ப ஒரு நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அது உறுதி" என்கிறார் பாரிவேந்தர்.












Click it and Unblock the Notifications