ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வா? வதந்திகளை நம்பாதீங்க.. தமிழக அரசு அளித்த விளக்கம்
சென்னை: வரும் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனவும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் அதாவது வரும் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதற்கு மின் வாரியம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கான கட்டண விகிதங்களையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாராக வைத்துள்ளது. இந்த நிலையில் தான் மின் கட்டண உயர்வு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல் பரவியது.

தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில் இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மின் கட்டண உயர்வு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் விதிக்கப்படவில்லை.
100 யூனிட்டுகளுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தப்படும் மின் இணைப்புகளுக்கு இலவச நடைமுறை தொடரும். அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். ஆணையை வழங்கினாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மின் கட்டண உயர்வு இல்லை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, ஏற்கனவே 20.05.2025 அன்று வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
100 யூனிட் இலவச மின்சாரம்
எனினும், தற்போது மீண்டும் மின் கட்டணம் குறித்த வதந்திகள் தொடர்ந்து பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும் அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. தற்சமயம், மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார வெளியிடப்படவில்லை. ஒழுங்குமுறை ஆணையத்தினால், முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், எந்தவொரு மின் கட்டண உயர்வும் இருக்காது..
தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications