முதல்வர் ஸ்டாலினின் தனி செயலர் உமாநாத் ஐஏஎஸ்க்கு எதிரான மனு தள்ளுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக உமாநாத் மீது நடவடிக்கை எடுக்க எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மார்ச் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு நிர்வாக வசதிக்காக, சில மாவட்டங்களின் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இதற்கிடையே, முதலமைச்சரின் தனிச் செயலர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
"தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக பதவி வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத், தன்னிச்சையாக தனக்கு கீழ் பணிபுரியும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
மேலும், "தேர்தலுக்காக பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் தனிச் செயலராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் இருக்கும்போது முதலமைச்சரின் தனிச் செயலாளர் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்." என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், உமாநாத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் மனுதாரர் முன்வைக்கவில்லை என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உமாநாத் ஐஏஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications