மதம் மாறியது எந்தப் பிரிவுக்கு.. சொல்லத் தவறியவருக்கு அரசு சலுகை கிடையாது.. ஹைகோர்ட்
சென்னை: இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவிற்கு மாறினார் என்பதை தெரிவிக்காதவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழைப் பெற உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த ரில்வான், ராம்ஜியா என்ற ஆதிதிராவிடர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹர்ஷத், ஹர்ஷிதா என இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த, 2012 அக்டோபர் மாதம், இஸ்லாம் மதத்தைத் தழுவிய அவர், 2008 ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருக்கழுக்குன்றம் தாசில்தாரருக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை நிராகரித்து, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், 2019 மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ரில்வான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இஸ்லாம் மதத்துக்கு மாறிய மனுதாரர், அந்த மதத்தில் எந்த பிரிவில் சேர்ந்துள்ளார் என்பதை தெரிவிக்காததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவிற்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்காததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழைப் பெற அவருக்கு உரிமையில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications