ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு வந்ததா? வந்து விழுந்த கேள்வி.. உதயநிதி பதில் இதுதான்
சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க திமுகவிற்கு அழைப்பு வந்ததா என்று செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலை பார்க்கலாம்.
இந்துக்களின் புனித கடவுளான ராமர் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. அயோத்தியில் தற்போது புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்திற்குப் பக்தர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. குறிப்பாக அன்றைய தினம் பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.
இந்த நிகழ்வில் பிரதமர் தொடங்கிப் பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தேர்தல் யுக்தியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளன..
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு வந்ததா? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை" என்றார்.
முன்னதாக இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல முக்கிய கட்சிகளும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறியது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், கட்டிமுடிக்கப்படாத கோயிலை அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் திறக்க இருக்கிறது.
பல லட்சக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை மரியாதையுடன் புறக்கணிப்பதாக கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தது.












Click it and Unblock the Notifications