பாஜக யாரை கூப்பிட்டு வந்தாலும் பிரயோஜனமே இல்லை.. வானதி சீனிவாசனுக்கு சவால் விட்ட சேகர்பாபு
சென்னை: தமிழகம் திராவிட மண்ணாக இருக்கும் வரையில், திராவிட மாடல் ஆட்சியில் பலனடைந்த மக்கள் இருக்கும் வரையில், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை இந்த லோக்சபா தேர்தலில் எங்களுக்கு பரிசாக வழங்குவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். பாஜக யாரை கூப்பிட்டு வந்தாலும் பிரயோஜனமே இல்லை என்று கூறிய சேகர்பாபு வானதி சீனிவாசனுக்கு சவால் விட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் பாஜக புது கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அந்த கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கோவை தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ரஜினி, கமல், விஜய் என அனைவர்களிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம் என்று கூறியுள்ளார்.

எல்லா நடிகர்களிடமும் பாஜக ஆதரவு கேட்கும், கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். செய்தியாளர்களான உங்களிடம் கூடத்தான் நாங்கள் ஆதரவு கேட்போம் என்று கூறினார். மக்கள் நீதிமய்யம் தரப்பிலிருந்து இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், வானதி சீனிவாசனின் பேச்சு மய்யத்தை பாஜக இழுக்க முயற்சிக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சேகர்பாபு, பாஜக யாருடைய தோளில் சவாரி செய்து வந்தாலும், உங்கள் தோள் மீது யாரை தூக்கி வந்தாலும், திடத் தோள்களை கொண்ட எங்கள் தளபதியார் இருக்கும் வரையில் அது நடக்காது. தமிழகம் திராவிட மண்ணாக இருக்கும் வரையில், திராவிட மாடல் ஆட்சியில் பலனடைந்த மக்கள் இருக்கும் வரையில், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை இந்த லோக்சபா தேர்தலில் எங்களுக்கு பரிசாக வழங்குவார்கள்.
பாஜக யாரை கூப்பிட்டு வந்தாலும் பிரயோஜனமே இல்லை. வானதி போன்றவர்கள் வேண்டுமென்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் அதன் பிறகு நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications