இபிஎஸ் கூறியது தப்பு இல்லையே..கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை..'டோனை' மாற்றிய நாராயணன் திருப்பதி
தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை அதிமுகவே தாங்கி பிடிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதில் எந்த தவறும் இல்லை என்று நாராயணன் திருப்பதி கூறினார்.
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் தான் பெரிய கட்சிகள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகிற கட்சி அதிமுகதான். நாங்கள் எப்போதுமே சொல்வது இதுதான். எடப்பாடி பழனிசாமி நாங்கள் தாங்குகிறோம் என்று சொன்னால் சொல்லட்டும். அதில் தவறு என்ன இருக்கு என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அ.தி.மு.க. பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு யாரும் உதவியது இல்லை. அதிமுக பல கட்சிகளை தாங்கிப்பிடித்து உதவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, எடப்படி பழனிசாமி கூறியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்து விரோத அரசாங்கம்
தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளரும் துணைத் தலைவருமான நாராயணன் திருப்பதி நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களுடைய கூட்டணி என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். எங்களுடைய இலக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசாங்கம். இந்த அரசாங்கம் ஊழல் அரசாங்கம், இந்து விரோத அரசாங்கம்.. அதனால இந்த அரசை தோற்கடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வலுவான ஒரு வேட்பாளர் களம் இறக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால்... நாங்கள் எடப்பாடியையும் ஓபிஎஸ்சையும் சந்தித்தோம்.

தலைமை தாங்குகிற கட்சி அதிமுகதான்
ரகசிய கூட்டம் எதையும் போடவில்லை. நேரடியாக சந்தித்து எங்கள் (பாஜக) விருப்பத்தை வெளிப்படுத்தினோம். எனவே எடப்பாடி பழனிசாமி சொன்னதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் தான் பெரிய கட்சிகள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகிற கட்சி அதிமுகதான். இதை தொடர்ந்து நாங்கள் எப்போதுமே சொல்வது இதுதான். எடப்பாடி பழனிசாமி நாங்கள் தாங்குகிறோம் என்று சொன்னால் சொல்லட்டும். அதில் தவறு என்ன இருக்கு.. பெரிய கட்சி சொல்லட்டும்.

வெட்கப்பட வேண்டிய அரசு
திமுகவிற்கு அடிமையாக திருமாவளவன் இருக்கிறார். இறையூர் விவகாரத்தில் இன்னும் கூட உண்மை கண்டறியப்படவில்லை. உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய ஒரு அரசு இருக்கிறது என்றால் அது திமுக அரசுதான். இறையூர் சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் ஆகப்போகிறது. சிபிசிஐடி விசாரணையால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னால்.. அது காவல்துறை தவறு இல்லை. காவல்துறையின் கைகள் அரசியல் வாதிகளால் கட்டப்பட்டுள்ளது.

எடப்பாடி சொன்னது சரிதான்
இதுநாள் வரையில் திருமாவளவன் அரசாங்கத்தை கண்டிக்கிறேன் என்ற வார்த்தையை சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சிதான் அந்த குடிநீர் தொட்டி முதலில் இடிக்கப்பட வேண்டும் என்று சொன்னது. கம்யூனிஸ்ட் கட்சியும் 2 சீட்டிற்காக 10 கோடியும் 15 கோடியும் கட்சியை அடைமானம் வைக்கிறது. காங்கிரஸ் கட்சியெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் என்பதுதான் என் கேள்வி. பேசாமல் திமுகவுடன் இணைத்துவிடலாம். எடப்பாடி பழனிசாமி சொன்னது மிக மிகச்சரிதான். திமுக கூட்டணி அடிமைகளின் கூட்டமாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ப சிதம்பரம் கேள்வி
பட்ஜெட்டிற்கும் எதார்த்தத்திற்கும் தொடர்பு இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாராயணன் திருப்பதி, "எதார்த்தத்திற்கும் சிதம்பரத்திற்குமே தொடர்பு கிடையாது. எனவே சிதம்பரம் எதார்த்தத்தை பற்றி பேசுவதுதான் சிரிப்பாக உள்ளது. சிதம்பரம் எப்போதுமே மந்திரியாக இருப்பதாக நினைத்து கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆட்சி செய்ய தெரியாமல்..
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது பால் விலை 45 ரூபாயில் இருந்தது. இப்போது பால் விலை 60 ரூபாயாக ஆகிவிட்டதாக ஒரு டிவிட் போட்டு இருக்கிறார். அவர் ஆட்சியில் இருந்த போது பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேல் இருந்தது. அதே போல ஆட்சி நடத்தியிருந்தால் இப்போது பால் விலை 100 ரூபாயை தாண்டியிருக்கும். ஆட்சி செய்ய தெரியாமல் விலைவாசியை உயர்த்தி விட்டது சிதம்பரம். எனவே எதார்த்தத்தை பற்றி சிதம்பரம் பேசுவது முறையல்ல" என்றார்.












Click it and Unblock the Notifications