அவங்களுக்கு ஒரு சம்பளம்.. இவங்களுக்கு ஒரு சம்பளம்.. இந்தியர்களை ஏமாற்றிய ஆரக்கிள்.. புகார்!
பிரபல மல்டிநேஷனல் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய பணியாளர்களுக்கு மிக குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: பிரபல மல்டிநேஷனல் நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய பணியாளர்களுக்கு மிக குறைவான ஊதியம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற நாட்டு ஊழியர்கள் பெறும் ஊதியத்தை விட இவர்கள் மிகவும் குறைவாக பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
பொதுவாக ''நவீன தீண்டாமை'' என்ற ஒரு வார்த்தை தமிழில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஜாதியை வைத்து செய்யப்படும் தீண்டாமை போலவே பொருளாதாரத்தை வைத்து செய்யப்படும் தீண்டாமைதான் நவீன தீண்டாமை. இது ஐடி உலகில் மிக அதிகமாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் பிரபல மல்டிநேஷனல் நிறுவனமான ஆரக்கிள் தற்போது ஒரு புகாரில் சிக்கி இருக்கிறது. ஆசியாவை சேர்ந்த ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

என்ன குற்றச்சாட்டு
குற்றச்சாட்டின் சாராம்சம் இதுதான், ஆரக்கிள் நிறுவனத்தில் உலகம் முழுக்க இருக்கும் கிளைகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு மிக குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதே பணியில், அதே புரோபைலில் வேலை பார்க்கும் அமெரிக்கா, ஐரோப்பா நாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மிக மோசம்
அதன்படி இந்தியா, இலங்கை, சீனா போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்த பணியாளர்கள், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்ரோ அமெரிக்க பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் இந்த அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. ஒரே பணியில் வேலை பார்க்கும் ஒரே அனுபவம் கொண்ட அமெரிக்கருக்கு ஒரு சம்பளமும் பெங்களூர்வாசிக்கு வேறு சம்பளமும் வேண்டும் என்றே கொடுக்கப்பட்டு வந்து இருக்கிறது.

பிரச்சனை
இந்த குற்றச்சாட்டை வைப்பது அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க தொழிலாளர் துறையாகும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் அமெரிக்க தொழிலாளர் துறை முடிவு செய்து இருக்கிறது. கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஆரக்கிள் இந்தியா உட்பட பல நாடுகளில் தனது கிளைகளை கொண்டு இருக்கிறது.

டேட்டா
உலகம் முழுக்க இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆசியா, ஆப்ரிக்கா பணியாளர்கள் மட்டும் இதனால் மொத்தமாக 2900 கோடி ரூபாய் வரை கடந்த ஒரு வருடத்தில் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள் என்று அமெரிக்க தொழிலாளர் துறை குற்றச்சாட்டை வைத்து இருக்கிறது. முக்கியமாக இதனால் இந்தியர்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் பிரபலம்
இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் பலர் ஆரக்கிள் நிறுவனத்தின் இந்திய கிளைகளிலும் வெளிநாட்டு கிளைகளிலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அதிக திறமைக்காகவும் குறைந்த சம்பளத்திற்காகவும் ஆரக்கிள் நிறுவனம் பணிக்கு எடுத்து ஏமாற்றி இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications