டிராக்டருக்கான டிரைலரை பதிவு செய்ய ஒப்புதல் தேவையில்லை: ஐகோர்ட்
சென்னை : மத்திய அரசின் உத்தரவுப்படி டிராக்டருக்கான டிரைலரை பதிவு செய்ய ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதின்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிராக்டருடன் இணைக்கப்படும் டிரைலரில் மோட்டார்கள் பொருத்தப்படவில்லை என்பதால், அதை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனவும் சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த தனியார் டிரைலர் உற்பத்தி நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் டிரைலர் எனும் வாகனம் கூடுதலாக இணைக்கப்பட்டு விவசாயப் பொருட்களை எடுத்து செல்வது வழக்கம். பொதுவாக மத்திய அரசின் விதிகளின் படி எந்த ஒரு புதிய மோட்டார் வாகனமும் பதிவு செய்ய இணையத்தில் பதிவு செய்து அதற்கான பதிவெண் பெறவேண்டியது அவசியம். அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் parivahan.gov.in என்ற இணையதளம்.
இந்நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களில் பின்னால் டிரைலர் பொருத்தப்படுவதாக இருந்தால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்று அந்தந்த போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த தனியார் டிரைலர் உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்படும் டிரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது என்றும் மோட்டார் வாகனத்தில் இயங்கும் டிராக்டருக்கு மட்டுமே பதிவு கட்டாயம் என தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் இணையதளத்தில் ஒப்புதல் பெறாமலேயே டிராக்டருக்கான டிரைலரை பதிவு செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு தனியார் டிரைலர் நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications