6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது.. கரூவூலத் துறை விளக்கம்
சென்னை: 6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் பொய்யானது என கருவூலத் துறை ஆணையர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து 6 மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் ஓய்வூதியதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கருவூலத் துறை ஆணையர் சமயமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் 6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது. அந்த தகவல்கள் பொய்யானது. பணத்தை எடுக்காத ஓய்வூதியர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்பப்படும்.
6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகளை முடக்க தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பொதுவாக ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் தகுதி சான்றிதழ் பெறப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால் அதை சமர்ப்பிப்பதில் இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாதந்தோறும் ஓய்வூதியம் எடுப்போருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து 6 மாதமாக எடுக்காதவர்களின் விவரங்களை சேகரித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளிக்கவுள்ளோம்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்கு பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சமயமூர்த்தி விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications