ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்.. வானியல் அதிசயம்! சென்னையிலிருந்து பார்க்க முடியுமா?
சென்னை: பிப். 28ம் தேதி ஒரே நேர்கோட்டில் கோள்கள் அணி வகுக்க இருக்கின்றன என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் எந்த கோளும் நேர்க்கோட்டில் வராது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அதேபோல இந்த வானியல் நிகழ்வை சென்னையிலிருந்து பார்க்க முடியுமா? என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு முக்கியமான வானியல் அதிசயமாக 7 கோள்களும் ஒரே வரிசையில் வர இருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி இந்த வானியல் அதிசயத்தை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். உண்மையில் எந்த கோளும் ஒரே நேர்கோட்டில் வருவது கிடையாது. ஆனால் பூமியிலிருந்து பார்ப்பதற்கு இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறன.
உதாரணத்துக்கு சாலையில் உள்ள மின் கம்பங்களை பார்த்தால் ஒரே நேர் கோட்டில் இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அவை சற்று விலகி இருப்பது தெரியும். அதுபோலத்தான் எல்லா கிரகமும் ஏறத்தாழ சமதளத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. ஆனால் முழுமையான சமதள பாதையில் அல்ல. இருப்பினும் பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதைப் போன்று நமக்கு தெரிகிறது.
பிப்.28ம் தேதி இரவு மேற்கு வானில் பார்த்தால், முதலில் சனி கிரகமும், அதைத் தொடர்ந்து புதன் கிரகமும், மூன்றாவதாக நெப்டியூனும், நான்காவதாக கொஞ்சம் விலகி வெள்ளி கிரகமும், ஐந்தாவதாக யுரேனஸ் கிரகமும், ஆறாவதாக வியாழனும், ஏழாவதாக செவ்வாயும் தெரியும். இவற்றில் வெள்ளி கிரகத்தை தவிர மற்ற அனைத்தும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் தெரியும். ஒவ்வொரு கிரகங்களும் பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கின்றன.
புதன் - 7.7 கோடி கி.மீ
வெள்ளி - 4.1 கோடி கி.மீ
செவ்வாய் - 22.5 கோடி கி.மீ
வியாழன் - 62.8 கோடி கி.மீ
சனி - 120 கோடி கி.மீ
யுரேனஸ் - 260 கோடி கி.மீ
நெப்டியூன் - 430 கோடி கி.மீ
தொலைவில் அமைந்திருக்கின்றன. இருப்பினும் இதில் 2 கிரகங்கள் தவிர மற்றவை அனைத்தும் வெறும் கண்களால் பார்த்தால் தெரியும். ஒளி மாசு குறைவாக இருக்கக்கூடிய பகுதியில் இருந்து பார்த்தால் வானில் இருக்கக்கூடிய கிரகங்கள் தெளிவாக தெரியும். சென்னையில் ஒளி மாசு அதிகம் இருப்பதால் அருகில் உள்ள மாசு குறைந்த இடத்திலிருந்து இந்த கிரகங்களை தெளிவாக பார்க்க முடியும்.
உதாரணத்திற்கு வேலூர் மாவட்டத்தில் வைனு பப்பு வானியல் ஆய்வகம் அமைந்திருக்கிறது. இந்த பகுதி ஒளி மாசு குறைவான பகுதி என்பதால் அங்கிருந்து பார்த்தால் இந்த கிரகங்களை தெளிவாக பார்க்க இயலும். இரவு வானிலும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும் இந்த கிரகங்களை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications