மீண்டும் சர்ச்சையில் சென்னை ஐஐடி. . தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் புறக்கணிப்பா? ராமதாஸ் கண்டனம்
சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து விட்டு சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடிய செயலுக்கு பா.ம.க. நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும் எனவும் ராமதாஸ் டிவிட் செய்துள்ளார்.

ஐஐடி பட்டமளிப்பு
சென்னை ஐஐடியின் 58-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 1,962 மாணவர்களுக்கு இணையம் வாயிலாகவே பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்தக் கல்வியாண்டில் அதிகபட்சமாக 392 பேர் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர்.

பேட்மிண்டன் வீராங்களை
விழாவில் பங்கேற்ற பிவி சிந்து, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பேசினார். பட்டம் பெறுவதோடு மட்டும் அல்லாமல் மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்வத்துடன் செய்யவேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழ்த்தாய் இல்லாமல் விழா
இந்நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாகவும் சமஸ்கிருத இறைவணக்கம் மட்டும் பாடப்பட்டதாகவும் புதியதொரு சர்ச்சை எழுந்தது. தமிழ்நாட்டில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம். ஆனால், ஐஐடி-யில் வந்தே மாதரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிவு பெற்றுள்ளது.

மறுபடியும் ஒரு புகார்
தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் சொல்லி விழா இனிதே முடிந்துவிட்டது. 2018ம் ஆண்டும் இதே சர்ச்சையில் ஐஐடி சிக்கியது.

பாமக கண்டனம்
இதற்கிடையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட் பதிவில், சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும் என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதே தவறு
மேலும் கடந்த காலத்தின் நிகழ்வுகள் குறித்து நினைவூட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது என்றும் 2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்திய ராமதாஸ், அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்றும் டிவிட் செய்துள்ளார்.

தமிழக அரசு தலையிட வேண்டும்
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு ஐஐடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிவரும் காலங்களில் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

திராவிடர் கழகம் கண்டனம்
இதுபோலவே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications