அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: விருப்ப மனு தாக்கல் செய்ய முடிவா? ஓபிஎஸ் தரப்பு கொடுத்த பரபர விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று ஒ பன்னீர் செல்வம் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினரும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்காக விருப்ப மனுவை பெற பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்திலும் மனு அளிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியானது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று ஒ பன்னீர் செல்வம் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் கை கோர்த்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் ஒலித்தது.

பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க
இதையடுத்து, ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்த எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடைபெறும் எனவும் வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் எனவும் தெரிவித்த அதிமுக தலைமை வரும் 26 ஆம் தேதி தேர்தலும் 27 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவித்தது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தில் மனு
இன்று எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று 37 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதமானது என்று கடுமையாக விமர்சித்து வரும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளர். இந்த மனு நாளை காலை 10 மணிக்க்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.

தாக்கல் செய்யப்போவது இல்லை
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினரும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்காக விருப்ப மனுவை பெற பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்திலும் மனு அளிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியானது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விருப்ப மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று ஒ பன்னீர் செல்வம் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக
"அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நாளைக்கு விசாரணை வர உள்ளது. இந்த நிலையில், தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பில் போட்டியிட இருப்பதாக வெளியாகி வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications