முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து.. தமிழக அரசு அதிரடி
சென்னை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தமிழக அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
கொலை முயற்சி ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சண்முகத்துக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு முதல்முறையாக விலக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிவி சண்முகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்டது பாமக தலைமை நிலைய செயலாளராக இருந்த கருணாநிதி.

தீவிர பிரச்சாரம்
இந்த தேர்தலில் சிவி சண்முகம் மற்றும் பாமக வேட்பாளர் கருணாநிதி ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. பிரச்சாரத்தின் போது ஒருவருக்கு ஒருவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக உரையாற்றினார்கள். தேர்தல் முடிவு வெளியானபோது குறைந்த வாக்கு எண்ணிக்கையில் சிவி சண்முகம் வெற்றி பெற்றார். மகிழ்ச்சியோடு தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் பகுதியில் உள்ள தனது வீட்டு முன்பாக அவர் அமர்ந்திருந்தார்.

தப்பிய சண்முகம்
இந்த நிலையில்தான், திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அங்கு வந்தது. அவர்கள் சிவி சண்முகத்தை வெட்டிக் கொல்வதற்கு முயற்சி செய்தனர். இதனால் பதற்றம் அடைந்த சிவி சண்முகம், சமயோஜிதமாக யோசித்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காருக்கு அடியில் புகுந்து கொலையாளிகளின் கண்களில் படாமல் மறைந்து கொண்டார். இந்த தாக்குதலை தடுக்க முற்பட்ட அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவரை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

பாமக தலைவர்கள் மீது புகார்
அதற்குள்ளாக காவல்துறையினரும் அதிமுகவினரும் அங்கு ஓடி வந்ததால் கொலைகார கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பாமக வேட்பாளராக இருந்த கருணாநிதி உள்ளிட்ட சுமார் 26 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்தார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், கருணாநிதி உள்ளிட்டோர் பெயரை நீக்கிவிட்டு 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய சிவி சண்முகம் வற்புறுத்தி கேட்டபிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் விசாரணைக்குப் பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டன.

துப்பாக்கி ஏந்திய போலீஸ்
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2012ம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சிவி சண்முகம் வீட்டிற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 4 போலீசார் சி.வி.சண்முகம் எங்கே சென்றாலும் அவர் கூடவே செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரரும் அடங்குவார். இந்த நிலையில்தான் தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி முதல் சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. யார் யாருக்கெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்து எடுத்த முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தாக்குதல்கள்
2006 ஆம் ஆண்டு மட்டுமல்ல 2011 ஆம் ஆண்டிலும் சிவி சண்முகம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றது. அப்படி இருக்கும்போது இப்போது பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது சரியல்ல என்று அதிமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications