போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்.. அடுத்து என்ன நடக்கும்? அமைச்சர் சிவசங்கர் தந்த பரபர விளக்கம்
சென்னை: 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே பஸ் ஸ்டிரைக் ஆரம்பித்தது. இருப்பினும், காலை முதலே பல இடங்களில் வழக்கமாகவே பேருந்துகள் இயங்கியது சென்னை உட்பட முக்கிய நகரங்களில் பேருந்து சேவையில் பாதிப்பு இல்லை.
அமைச்சர் சிவசங்கர்: இதற்கிடையே அமைச்சர் சிவசங்கர் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "பேருந்து சேவை இன்று காலை முதல் வழக்கமாகவே இருக்கிறது. எங்காவது ஓரிரு இடங்களில் பேருந்து சேவை குறைவாக இருப்பதாகப் புகார் வந்தால் அங்கும் பஸ் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இன்று காலை முதல் நான் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அனைத்து இடங்களிலும் பேருந்துகள் சேவை வழக்கமாகவே இருக்கிறது. எல்லா பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் வெளியே வந்துவிட்டன. அனைத்து இடங்களிலும் பஸ்கள் வழக்கம் போலவே இயங்கி வருகிறது. எங்கேயும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
என்ன நடந்தது: அவர்கள் (தொழிற்சங்கத்தினர்) தான் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு, நேற்றைய தினமே போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் காத்திருந்தோம். இரண்டு கோரிக்கைகளில் செய்து தர உறுதி அளித்திருந்தோம். மற்ற விஷயங்களில் வேலை நடந்து வருகிறது.
காலியிடங்களை நிரப்ப டிரைவர், ஓட்டுநர்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். இதை அவர்களே அறிவார்கள். ஆனால், அரசியலுக்காக இல்லை என்கிறார்கள். அதேபோல பணிக் காலத்தில் ஓட்டுநர், டிரைவர் உயிரிழந்தால் அவர்களுக்குப் பணி வழங்குவதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடக்கவில்லை. திமுக ஆட்சி அமைத்த பிறகே வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை அளிக்கப்பட்டு வருகிறது.
தவறான தகவல்: ஆனால், இந்த விவகாரங்களில் திட்டமிட்டு தவறான தகவல்களை அவர்கள் அளிக்கிறார்கள். போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி உண்மைக்கு மாறான தகவல்களைச் சொல்கிறார்கள். அவர்கள் வலியுறுத்துவது ஒரே ஒரு கோரிக்கைதான். மற்றபடி எண்ணிக்கைக்காகவே ஆறு கோரிக்கை என்கிறார்கள்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை என்பது ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுதான். இதற்குத் தொடக்க நடவடிக்கையாக அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த பணி முடிந்த பிறகு ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அறிவிப்பு வெளியாகும்.
நான் இப்போது சென்னையில் இருந்தபடி தமிழகம் முழுக்க இயக்கப்படும் பேருந்து சேவையைக் கண்காணித்து வருகிறேன். எங்காவது பேருந்து சேவைகள் குறைவாக இருந்தால் அதிகாரிகள் உரிய ஆய்வை நடத்துவார்கள். நான் விடியற்காலை முதலே பல இடங்களில் பேசி வருகிறேன். எங்கும் பஸ் சேவையில் பாதிப்பு இல்லை. மழை பெய்யும் சில மாவட்டங்களில் மட்டும் ஊழியர்கள் வரத் தாமதமாவதால் பஸ் குறைவாக இயக்கப்படுகிறது. அதைத் தவிர வேறு எங்கும் பிரச்சினை இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications