விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்? தனியாக செல்லும் விஜய் கார்.. என்ன ஆச்சு?
சென்னை: கடந்த 2 நாட்களாக தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சருக்கான கான்வாய் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில், கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் இன்றி தனி வாகனத்தில் பயணம் செய்கிறார் விஜய். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்பாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை அன்று வெளியானது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தனது முதல் தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. தவெக தனித்து 108 இடங்களில் வென்றுள்ளது. திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக தனித்து 47 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்திற்கு முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ கான்வாய் வாகனங்கள் வந்தன.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டன. கடந்த 3 நாட்களாக கான்வாய் வாகனங்களுடன் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து விஜய் நீலாங்கரை வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பே கான்வாய் வாகனங்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
கடந்த இரண்டு நாட்களாக, முதலமைச்சருக்கான பாதுகாப்பு அளவிற்கு இணையான கான்வாய் பாதுகாப்புடன் விஜய் பயணம் செய்த நிலையில், இந்த திடீர் மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் கான்வாய் வாகனம் செல்லாதது தவெக கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றிருப்பதன் மூலம், அக்கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவு தந்துள்ள நிலையில் தற்போது 113 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விலகி தவெகவிற்கு 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தால்தான் அக்கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் உள்ளது.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மே 6 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது ஆட்சி அமைப்பதற்கான 118 எம்.எல்.ஏக்களின் முழுமையான பட்டியலை ஆளுநர் அர்லேகர், விஜய்யிடம் கேட்டுள்ளார். ஆனால் விஜய் கொடுக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி விஜய் நாளை மே 7 ஆம் தேதி பதவியேற்பாரா? என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டபடி நாளை பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், யாரும் எதிர்பாராத புதிய திருப்பமாக தமிழ்நாட்டை மாறி, மாறி ஆண்ட திமுக-வும், அதிமுக-வும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்காமல் தடுப்பதற்காக கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதிமுக ஆட்சி அமைக்க, திமுக வெளியில் இருந்து ஆதரவு தரத் தயாராகிறது எனத் தகவல்கள் பரபரக்கின்றன. இந்தச் சூழலில் தான் விஜய்க்கான கான்வாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு சென்றபோது, முதலமைச்சருக்கான சிறப்பு கான்வாய் வாகனங்களில் விஜய் சென்றார். இது குறித்து அதிகாரிகளிடம், "முதல்வராக பதவியேற்காத நிலையில் விஜய்க்கு எப்படி இந்த கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டன?" என ஆளுநர் அர்லேகர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே, விஜய்க்கான கான்வாய் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மற்றபடி, வேறு காரணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications