அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லையா? உண்மை என்ன? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரலுக்கு பதில் மே 31 வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் போது அந்த கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என்றுதான் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால், அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை தொடர்ந்து பணியாற்ற மறுநியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதம் வரை மறுநியமனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது' என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில், அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும்போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை (ஏப்ரல்) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதைத் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31 ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது. ஆனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications