சிஎஸ்கே அணியை தடை செய்யுங்க.. சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ விடுத்த திடீர் கோரிக்கை
சென்னை: தமிழக வீரர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் இன்று தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சட்டசபை நிகழ்ந்து வருகிறது.. கடந்த 1ம் தேதி, தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை கட்டடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடந்து முடிந்தது.

மானிய கோரிக்கை மீதான விவாதம்
அதன் பிறகு, மகாவீர் ஜெயந்தி விடுமுறைக்கு பிறகு 5 ஆம்தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அன்றைய தினம் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் துறை மீதான விவாதம் நடந்தது.. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார்.
இதையடுத்து 6ம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறை மீதான விவாதம் நடைபெற்றது. மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர், விவாதத்துக்கு பதில் அளித்தனர்.
பின்னர் விடுமுறைக்கு பிறகு நேற்று சட்டப்பேரவை கூடியது. இதில், கேள்வி நேரதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் அரசின் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்ததார். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.
தமிழர்களே இல்லாத சென்னை அணி
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், "தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவர் கூட சிஎஸ்கே அணியில் இடம் பெறவில்லை.. தமிழர்களே இல்லமால் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர். வெளி மாநில வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்று பேசினார். இதற்கு அரசு தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.
அதேபோல், விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ வேலுமணி, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தார். அமைச்சர் உதயநிதியிடம் இந்த கோரிக்கையை வைத்த எம்.எல்.ஏ வேலுமணி, அதிமுக ஆட்சியில் 400 பாஸ்கள் எம்.எல்.ஏக்களுக்ககாக கொடுக்கப்பட்டதாகவும் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் பாஸ்கள் கொடுப்பது இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications