ஆஹா.. இத்தனை பேரா? தமிழ்நாட்டிலேயே இந்த தொகுதியில் தான் அதிக வேட்பாளர்கள்.. எங்கேனு பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தமாக, 1403 பேர் எம்.பி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 40 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இறுதி நாளில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கிடையே, அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்த வேட்பாளர்கள்: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,403 ஆக உள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் மார்ச் 21-ல் 9, 22ஆம் தேதி 47 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மார்ச் 23, 24 ஆகிய 2 நாட்களும் விடுமுறை. தொடர்ந்து திங்கட்கிழமை மார்ச் 25ஆம் தேதி 402 பேரும், 26ஆம் தேதி 301 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று மாலை 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதற்காக 2 மணிக்கே இறுதியாக வேட்பு மனுவுடன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையாக வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் தொகுதியில் தான் அதிகம்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,403 பேர், 1,749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 62 வேட்பாளர்கள் 70க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு தொகுதியில் 18 பேர் 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் இடத்தில் வட சென்னை தொகுதியில் 54 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி வேட்பாளர்கள்: வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு, ஏற்கப்படாத வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து, 30ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் உள்ளது. கட்சிகளின் சார்பாக மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களும் வாபஸ் பெறுவார்கள். 30ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 6, 23,26,901 வாக்காளர்கள் உள்ளனர். 3,06,02 367 ஆண் வாக்காளர்களும் 3,17,16,069 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,465 பேரும் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10,90,574 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 6 கோடி வாக்காளர்கள் தான், 39 எம்.பிக்களை தேர்வு செய்ய உள்ளனர்.












Click it and Unblock the Notifications