வட்டியில்லா கடன்: பட்டுக்கோட்டை அருகே லட்சக்கணக்கில் நகை மோசடி... திருச்சி ஐஜியிடம் புகார்
சென்னை: இஸ்லாமியருக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாக கூறி நகை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டு தர வலியுறுத்தி திருச்சி மண்டல ஐஜியிடம் பெண் புகார் மனு அளித்துள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள மதுக்கூர் பேரூராட்சியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி சபருன்னிஷா இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தார். அதில், "எனது மருத்துவ செலவுக்காக பணம் தேவைப்பட்ட போது உறவினர் மைதீன் என்பவரிடம் உதவி கோரினேன்.
திருச்சி மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவராக பதவி வகித்து வரும் முகமது பாருக் மூலம் வட்டியில்லாத கடன் வழங்குவதாக கூறி மைதீன் என்னிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டுத்தார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழு தொகையும் நான் செலுத்திவிட்டேன். இருப்பினும் இதுவரை எனது நகைகளை திருப்பி வழங்காமல் ஏமாற்றி வருகிறார்.
இது குறித்து விசாரித்தபோது இதுபோல் பலரிடம் கோடிக்கணக்கில் நகைகளை பெற்று ஏமாற்றி வருவதாக அறிந்தேன். பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நகையை மீட்டுத்தர வேண்டும்." என மனுவில் தெரிவித்துள்ளார்.