இளைஞர்களே உஷார்.. ஐ.டி வேலை என நம்பி விசாரிக்காம வெளிநாடு போயிடாதீங்க! அயலக தமிழர் நலத்துறை வார்னிங்
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் மோசடி கும்பலிடம் இளைஞர்கள் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வேலை எனக் கூறி அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களை சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்துவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களுக்கு அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 83 தமிழர்களை மீட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கம்போடியா, மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு ஐ.டி பணி என்ற பெயரில் சுற்றுலா விசாவில் அழைத்து சென்று சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்துவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத இணையதள பணிகளை செய்ய மறுக்கும் இளைஞர்களை கடுமையாக துன்புறுத்துவதாகவும் அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லும் முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அயலக தமிழர் நலத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
அண்மைக்காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு ஐ.டி பணி டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணி என்று அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்துவதாகவும், லாவோஸ் நாட்டில் சுற்றுலா விசாவில் பணி புரிய முடியாது எனவும் குற்றங்களுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும், எனவே யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜெண்ட், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்கு விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்றும், விசா உண்மைத்தன்மை, பணி ஒப்பந்தம் பற்றி இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொண்ட பிறகே செல்ல வேண்டும் என்றும் அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications