திடீரென நிறம் மாறிய வட சென்னை கடல்.. இதுதான் காரணமா? கொதிக்கும் மக்கள்
சென்னை: வட சென்னையில் எண்ணூர், பெரிய குப்பம் ,திருவொற்றியூர், கிளி ஜோசியம் நகர், மஸ்தான் கோவில் குப்பம், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கடல் நீரில் கலப்பதால் கருப்பாக வடசென்னை கடல் மாறி உள்ளது. இதனால் கடல் நீர் மாசு அடைந்து கரையோரம் பிடிக்கப்படும் மீன்களும் விஷத்தன்மையாக மாறும் அபாயம் இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரை போல் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையேயான கடற்கரையை ரூ.100 கோடியில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. இதன்படி அந்த பகுதியில் நடைபாதை, பெஞ்சுகள், யோகாவசதி, குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உணவுக்கடைகள், சைக்கிள் பாதை போன்றவை அமைக்கப்பட உள்ளது. ஒரு பக்கம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வங்கக்கடல் கழிவுநீர் கலப்பால் மோசமான நிலையில் உள்ளது.

சென்னையில் எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகள் மாநகராட்சி எல்லைக்குள் வந்த போதிலும் அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்ல. பாதாள சாக்கடை இணைப்புகள் இல்லாமல் முக்கிய பகுதிகள் உள்ளன. குறிப்பாக எண்ணூர், பெரிய குப்பம் ,திருவொற்றியூர், கிளி ஜோசியம் நகர், மஸ்தான் கோவில் குப்பம், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் கடல் நீரில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கடல் நீர் மாசு அடைந்து கரையோரம் பிடிக்கப்படும் மீன்களும் விஷத்தன்மையாக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் அருகே சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கடலில் அப்படியே கலக்கப்படுவதால் அந்த கடற்கரை பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவு நீர் கலப்பால் எண்ணூரை சுற்றி கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் அமைத்து, கழிவு நீர் கடலில் சென்று கலக்கும் வகையில் திருப்பி விடப்பட்டு உள்ளதை உடனே தடுக்க வேண்டும் என்று எண்ணூர், காசிமேடு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மெரினாவைப் போல் வடசென்னை கடற்கரைகளை அரசு கண்டு கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதனிடையே திருவொற்றியூர் அருகே கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கே.ஆர். ராமசாமி தெருவில் இருந்து கிளிஜோசியம் நகர் வரை புதிதாக கழிவுநீர் கால்வாய் பாதையை சென்னை மாநகராட்சி அமைப்பு வருகிறது. இது கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications