இரவெல்லாம் கட்டில் மீதும், ஸ்டூல் மீதும்.. கதிகலங்கி போன வடசென்னை.. வீட்டைவிட்டு இடம்பெயரும் துயரம்
வடசென்னை மக்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றனர்
சென்னை: 2 நாட்களாக கடுமையான அவதிக்கு ஆளான வடசென்னை மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்து இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
சென்னையில் 2 நாட்களாக மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.. தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.. அந்த வகையில், சென்னை மாநகரம் முழுவதும் 2 நாட்களாகவே மழையின் பிடியில் மக்கள் சிக்கி உள்ளனர்..

தண்ணீர் தண்ணீர்
நேற்று முன்தினம் காலையில் ஆரம்பித்த மழை, விடிய விடிய கொட்டி கொண்டிருந்தது.. நடுஇரவில் இடி மின்னலுடன் கூடிய மழை அடித்து ஊற்றியது.. இதனால் வடசென்னையே மிதக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது..

மழைநீர்
அதேபோல, சென்னை கொருக்குபேட்டை சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் வீடுகளிலும் புகுந்து விட்டது.. தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் குடியிருப்புக்குள் மழைநீர் வீடுகளிலும் புகுந்துவிட்டது.. ஆனாலும் சாலைகள் எல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அவர்களால் வெளியேறவே முடியாத நிலைமை உள்ளது... இதுகுறித்து உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டும், அவர்கள் உடனடியாக வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கவில்லை என்று தெரிகிறது..
Recommended Video

குடம்
எனவே, நேற்று முன்தினம் இரவெல்லாம் தூங்காமல் தண்ணீரை குடத்தை கொண்டு அள்ளி வெளியே கொட்டி கொண்டிருந்தனர். மேலும், தங்களுடைய சொந்த செலவில் மோட்டார் வாடகை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்தும் அவல நிலைக்கு ஆளாகினர்.. ஆனால், மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் காரணம் தெரிவித்தனராம்.

பாதிப்பு
இப்போதைக்கு வடசென்னை பகுதிகளான ராயபுரம், திருவொற்றியூர், தண்டயார்பேட்டை, காசிமேடு, கொருக்குபேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு வியாசர்பாடி, ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன... பெரம்பூர் கே.எம். கார்டன் அருகே உள்ள 15 தெருக்கள், திருவிகநகர், கொருக்குப்பேட்டை, சிவாஜி நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், அவர்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளன. மின்சாதன பொருட்களும் வீணாகிவிட்டன.

நாற்காலிகள்
வீடுகளுக்குள் தண்ணீர் வடியாமல் உள்ளதால், கட்டில்களிலும், சேர்களிலும், ஸ்டூல்களிலும் விடிய விடிய உட்கார்ந்திருந்தனர் மக்கள்.. மேலும் தண்ணீரையும் குடங்களில் வெளியேற்றி கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு உணவு இல்லை, தங்குமிடம் இல்லை, கரண்ட் இல்லை, பலரால் பொதுக்கழிப்பிடம் செல்ல முடியாத நிலைமை உள்ளது.. எனவேதான், தங்கள் பொருட்கள், உடைமைகளை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications