தீபாவளி வரை மழை வெளுக்கும் - சிவப்பு,ஆரஞ்ச், மஞ்சள், பச்சை எச்சரிக்கை நிறங்களின் அர்த்தம் இதுதான்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என விதவிதமான வித்தியசமான வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரைக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மிக கனமழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன ஆரஞ்ச் அலெர்ட் என்ற கேள்வி எல்லோருக்கும் வெகுநாட்களாக இருந்து வருகிறது. வானிலை அறிக்கை பற்றி கேட்கும் போதே நமக்கு இந்த பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்ச் என்ற வார்த்தைகளே அதிக அச்சத்தை தருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையால் இன்று திருவாரூர், கடலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதி, தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிதமான மழை பெய்ய உள்ள மாவட்டங்களுக்கு பச்சை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.

வானிலை மைய எச்சரிக்கைகள்
வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

லேசான மழை பெய்யும்
பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. மிதமான அளவு மழை பெய்யும். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. 65 மில்லி மீட்டருக்கு கீழே மழை அளவு பதிவாகும்.
Recommended Video

மோசமான வானிலை
வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இந்த கால கட்டத்தில் 65 மில்லி மீட்டர் மழை அளவுக்கு மேல் 115 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். 115 மில்லி மீட்டருக்கு மேல் 204 மில்லி மீட்டர் வரை மழை அளவு பதிவாகும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது நலம்.

மிக கனமழை
மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் 220 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆரஞ்ச் எச்சரிக்கை எந்தெந்த மாவட்டங்கள்
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி நாளிலும் கனமழை கொட்டும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

எத்தனை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை
தென்காசி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி,திண்டுக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications