தமிழக பட்ஜெட் ரூபாய் லோகோ மாற்றத்தால்.. புலம்பி தீர்க்கும் வட இந்திய நெட்டிசன்கள்!
சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் '₹' என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பயன்படுத்தி இருப்பது வட இந்தியாவை மிரள வைத்துள்ளது. இதனால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வட இந்தியர்கள், தமிழர்களை பழிவாங்க இந்தி மொழியை திணித்துவிடுங்கள் என சமூக வலைதளங்களில் கூப்பாடு போட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் 2025-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று பொருளாதார ஆய்வறிக்கை உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

மேலும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூபாய் அடையாளக் குறியீடாக பின்பற்றப்படுகிற '₹' என்பது மாற்றப்பட்டுள்ளது. '₹' என்பதற்குப் பதிலாக ரூபாய் என தமிழில் எழுதப்படுகிறது. இதில் உள்ள ரூ என்ற தமிழ் எழுத்தையே ரூபாய் அடையாளக் குறையீடாக தமிழ்நாடு அரசு பின்பற்றி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி முடிவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு திமுக தரப்பில் பதிலடியும் தரப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே ரூ எழுத்து பயன்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆனாலும் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக வட இந்தியர்கள் புலம்பித் தள்ளுகின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ரொம்பவே வட இந்தியர்கள் கொதிப்பைக் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்தது தெரிவிக்கும் வட இந்தியர்கள், தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயம் என்பதே இல்லை; ஆனாலும் கீழான அரசியலுக்காக திமுக இப்படி செய்கிறது; இப்போது '₹' என்ற அடையாளத்தையே மாற்றுவது மோசமான அரசியல் என்கின்றனர்.
அத்துடன், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக நிச்சயம் தோற்கத்தான் போகிறது; இந்த தோல்வியில் இருந்து தப்புவதற்காக திமுக தலைவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுகின்றனர் என்கிற விமர்சனத்தையும் வட இந்தியர்கள் முன்வைக்கின்றனர்.
டெல்லியில் கோலோச்சிய அரவிந்த் கெஜ்ரிவால் போல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிலைமையும் மாறிவருகிறது என கிண்டலடித்துள்ளார்.
அதேபோல, இப்படி எல்லாம் தமிழ்நாடு அரசும் தென்னிந்திய மாநிலங்களும் அடம் பிடித்துக் கொண்டே இருந்தால் வேறுவழியே இல்லை.. இந்தி மொழியை தென்னிந்திய மாநிலங்கள் மீது திணித்துதான் ஆக வேண்டும் என்ற வன்மத்தையும் கக்கி இருக்கின்றனர். இதற்கு தமிழர்கள் பலரும் பதிலடியும் தருவதால் சமூக வலைதளங்கள் உக்கிர போர்க்களமாக உருமாறிவிட்டன.












Click it and Unblock the Notifications