வட இந்திய தொழிலாளர் விவகாரம்: வதந்'தீ' அணையட்டும் ..தெருவில் தீமூட்ட வேண்டாம்- வைரமுத்து
வட இந்திய தொழிலாளர் விவகாரத்தில் வதந்தி பரப்ப வேண்டாம் என்கிறார் வைரமுத்து.
சென்னை: வட இந்திய தொழிலாளர் விவகாரத்தில் வதந்'தீ' அணையட்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இல்லை என்கிற திட்டமிட்ட வதந்தியை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும் ஹோலி பண்டிகைக்காக வட இந்திய மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றதையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என பொய்யாக சித்தரித்தும் சில பத்திரிகையாளர்கள் எழுதினர்.

இத்தகைய வதந்திகள் நாடு முழுவதும் பேசுபொருளானது. பீகார் சட்டசபையிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தமிழ்நாட்டில் அப்படியான ஒரு நிலைமை உருவாகி இருந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எச்சரித்தார். ஆனால் தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற துணை முதல்வர் தேஜஸ்வி யாத்வ், தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்தார்.
மேலும் ஜார்க்கண்ட், பீகார் மாநில அரசு குழுக்களும் தமிழ்நாட்டில் வட இந்தியர் நிலைமை தொடர்பாக ஆய்வு செய்தது. இந்தக் குழுக்களும் தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்றனர்.
இதனிடையே வட இந்திய தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியது, வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டது ஆகியவற்றுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இத்தகைய வதந்தி பரப்புவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தப் பின்னணியில் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டின் கட்டமைப்பு
பொருளாதாரப் பளபளப்பு
முதலமைச்சரின்
தேசிய பிம்பம் இவற்றைப்
பொறுக்க முடியாதவர்களின்
பொய் நாடகம்தான்
வால் முளைத்த வதந்தி
வதந்'தீ' அணையட்டும்
தொழிலாளர்களின்
அடுப்பை அணைத்துவிட்டுத்
தெருவில் தீமூட்ட வேண்டாம்
தமிழ்நாடு வளர்க;
தொழிலமைதி பெறுக
இவ்வாறு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications