மேடவாக்கம் ஏடிஎம் மையத்தை உடைத்த இளைஞர்.. மும்பையில் ஒலித்த அலாரம்.. தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சியை நடத்தியதாக வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில் தனியார் வங்கி (ஐசிஐசிஐ) ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்-ல் யாரோ ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இயந்திரத்தில் சிக்கிய ஏடிஎம் கார்டு.. வடஇந்திய இளைஞர் செய்த காரியம்! ஜெயிலில் கம்பி எண்ணும் பரிதாபம்
ஏடிஎம் இயந்திரம்
அப்போது, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (22), என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொள்ளை முயற்சியை மனோஜ்குமார் தனித்து செய்தாரா இல்லை வேறு யாராவது கூட்டு இருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை சம்பவம்
மேலும் மனோஜ்குமாருக்கு வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்று ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது, ஏடிஎம் மெஷினையே கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன.
வளசரவாக்கம்
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் ஆர்.எம். ப்ளாசா என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு அதிகாலை எச்டிஎஃப்சி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மெஷினில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அந்த இடத்தை விட்டு தலைத்தெறிக்க ஓடிவிட்டனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பூந்தமல்லி ஏடிஎம்
அது போல் அதே ஆகஸ்ட் மாதம் சென்னை பூந்தமல்லி ஜட்ஜ் செல்லப்ப தெருவில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் கடந்த ஜூலை மாதம் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோது அலாரம் ஒலிக்கவே அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அங்கு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.