தமிழகத்தில் படித்ததாக பொய்.. வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட போலி சான்றிதழ்கள் சிக்கின.. பரபரப்பு!
சென்னை: உத்தர பிரதேசம் மாநிலம் தியோரியா மாவட்டத்தில் அஞ்சல் அலுவலக பணிகளில் சேர தமிழகத்தில் படித்ததாக 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணியின்போது இந்த திடுக்கிடும் மோசடி அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில் தற்போது அரசு பணிகளுக்கான தேர்வுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவால் தடைப்பட்ட எழுத்துத்தேர்வு, நேர்க்காணல்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
எப்படியாவது அரசு பணிகளில் சேர வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என நிறைய பேர் விரும்புகின்றனர். இதன் காரணமாக அதிகப்படியான போட்டி நிலவுகிறது.

அரசு பணிக்காக முறைகேடு
இதனால் அரசு பணியை பெற்று விட வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்தல், தேர்வில் ஆள்மாறாட்டம், போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட முறைகேடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் போலி சான்றுகள் மூலம் பணிக்கு சேர்ந்துள்ளனர். இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200க்கும் அதிகமானவர்கள் போலி சான்றிழ்கள் கொடுத்து தமிழகத்தின் மத்திய அரசு பணிகளில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து முடித்ததாக மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்களை போலியாக வழங்கியது தெரியவந்தது.

உத்தர பிரதேச பணிக்கு போலி சான்று
இந்நிலையில் தான் அடுத்த கட்டமாக இன்னொரு பகீர் தகவலை தமிழ்நாடு தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது தமிழக பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போன்ற போலி சான்றிதழ்கள் தயாரித்து மத்திய அரசு பணி பெற முயன்றது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் பணிக்கு சேர தமிழகத்தில் படித்ததாக போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முறைகேடு அம்பலமானது எப்படி
மத்திய அரசு பணிகளுக்கு வழங்கும் சான்றுகள் சரியானதா என்பதை மத்திய தேர்வு ஆணையம், ஒவ்வொரு மாநில தேர்வு ஆணையத்தின் உதவியுடன் சரிபார்க்கும். அப்படி சரிபார்க்கும் பணி நடந்த நிலையில் தான் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் போலி சான்று வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேசத்தில் அச்சடிப்பு
மேலும்தற்போது வரை ஆய்வு செய்த 2,500 மதிப்பெண் சான்றிதழ்களில் 1000 சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 300 பேர் தமிழக தபால் நிலையங்களில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி சான்றிதழ்களில் பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications