"வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ போலியானது".. டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளங்களில் பரவும் 2 வீடியோக்களும் போலியானது என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை: சமூக வலைதளங்களில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் பரவி வருகின்றன. அந்த 2 வீடியோக்களும் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இப்படி வரும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய உரிய தரவுகள் இல்லாததால், ஒரு சிலர் இங்கு வந்து குற்ற செயல்களிலும் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அதேபோல வட மாநில தொழிலாளர்களினால் இங்குள்ள வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாகவும் பரவலாக சமூக வலைத்தளங்களிலும் சிலர் பதிவிடுவதை காண முடிகிறது.

பீகார் இளைஞர்கள்
இது தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் ஓடும் ரயிலில் வட மாநில தொழிலாளியை ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக வட மாநில தொழிலாளியை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து காவல்துறை கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தமிழகத்தில் பணி புரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரண்டு வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

வேகமாக பரவிய வீடியோ
குறிப்பாக வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்க்கும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்து இருந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட இது தொடர்பாக தனது ட்விட் பதிவில் கவலை தெரிவித்து இருந்தார். நிதிஷ் குமார் தனது ட்விட் பதிவில் கூறுகையில், "தென் மாநிலத்திற்கு வாழ்வாதாரத்தை தேடி வரும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழக அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்யுமாறு பீகார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்" என்று பதிவிட்டு இருந்தார்.

இரு வீடியோவும் போலியானவை
இந்த நிலையில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல அந்த வீடியோக்கள் காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன.

போலியான வீடியோக்களை பரப்ப வேண்டாம்
இந்த இரு வீடியோக்களில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டதுடன் தொடர்புடையது ஆகும். இன்னொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக் கொண்ட வீடியோ ஆகும். இதுதான் உண்மை . தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications