அண்ணாசாலையில் பிரபல உணவகத்தில் சென்னை இளைஞர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை அண்ணாசாலை பெரிய மசூதி எதிரே செயல்படும் பிரபல தனியார் உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அங்கு சாப்பிட வந்த இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் இளைஞர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை அண்ணாசாலையில் பெரிய மசூதி அருகே வரிசையாக மிகவும் பிரபலமான உணவகங்கள் செயல்படுகின்றன. அதில் ஒரு உணவகத்தில் வடமாநில ஊழியர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.

குறிப்பிட்ட அந்த உணவகத்திற்கு 2 இளைஞர்கள் நேற்று சாப்பிட சென்றிருக்கிறார்கள்.. அப்போது அவர்களுக்கு இருக்கை தொடர்பாக பிரச்னை எழுந்தது. அப்போது வடமாநில தொழிலாளர்கள் அவர்களை வேறு இருக்கையில் அமரச் சொன்னார்களாம்.
அப்போது சென்னை இளைஞர்கள் மறுத்துள்ளார்களாம். இதனால் வடமாநில ஊழியர்கள் சிலர், சாப்பிட வந்த அந்த இளைஞரிடம் ஏன் போகமறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்களாம். அப்போது இரு தரப்பினரிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் மாறி தரக்குறைவான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பானது.
அப்போது, வடமாநிலத்தவர்கள் கட்டை, கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வாடிக்கையாளர் ஒருவர் காயம் அடைந்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேசி வருகிறார்கள். விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னை அண்ணா சாலை உணவகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications