ரஜினிகாந்தே ‛ரீல்’ தான்! ரியல் அண்ணாமலை நான் தான்! சேகர்பாபுவை ஒருமையில் திட்டிய எச் ராஜா! பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மாநில அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, அமைச்சர் சேகர்பாபுவை ஒருமையில் விமர்சனம் செய்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்தே ரீல் தான், நான் தான் ரியல் அண்ணாமலை என முக்கிய பிரபலத்தை குறிப்பிட்டு அவர் பேசியது கைத்தட்டுகளோடு பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஆளும் கட்சியை பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனவும், அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாது அணை விவகாரம், கனிமவள கொள்ளை, டாஸ்மாக் கடைகளை மூடுதல், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த பாஜகவின் ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஒருமையில் திட்டினார். மேலும் நான் தான் ரியல் அண்ணாமலை என எச் ராஜா கூறினார். இதுதொடர்பாக எச் ராஜா பேசியதாவது: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபாபு கோவில் நிலத்தில் கைவைத்து வருகிறார். கோவில் நிலத்தில் கைவைக்க அருக்கு என்ன உரிமை இருக்கிறது. சேகர்பாபு யார் என்பது எனக்கு தெரியும். அவரது முழு வரலாறும் எனக்கு தெரியும்.
சமீபத்தில் பழனியில் 88.9 ஹெக்டேர் அதாவது 220 ஏக்கரில் கோசாலை இருக்கிறது. இது அறநிலையத்துறையிடம் இருப்பதாக தெரிவிக்கிறார். அது கோவில் நிலம். ஏ பதிவேட்டில் என்ன உள்ளது?. அந்த நிலம் என்பது 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்து தானமாக கொடுத்தது. இத்தகைய சூழலில் அந்த நிலத்தில் ‛சிப்காட்' கட்ட போறாராம். இது அந்த ஊரில் உள்ள ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தேவத்தூர், கள்ளிமந்தையம் உள்ளிட்ட இடங்களுக்கு நான் மாடு வாங்க போவேன். நண்பர் ரஜினிகாந்த் சினிமாவில் தான் அண்ணாமலை. நான் நிஜத்தில் அண்ணாமலை. ரஜினிகாந்த் ரீல் அண்ணாமலை. நான் ரியல் லைவ் அண்ணாமலை. எனக்கு எல்லா ஊரும் அத்துப்புடி.
நீங்கள்(அதாவது எச் ராஜா) போய் கால் வைத்தால் தான் தீர்வு வரும். 220 ஏக்கர் நிலத்தை கைப்பற்றிவிட்டு மாட்டை வெட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என கூறினார். கோசாலையில் இளம் மாடு சாகும் தருவாயில் உள்ளது. மேலும் உணவு போடாமல் மாடுகள் இறந்துள்ளது. இதற்கான டாக்டர் சான்று உள்ளது. நான் எதையும் ஆதாரமின்றி பேசமாட்டேன்'' என சாடினார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலை படத்தில் மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனடிப்படையில் எச் ராஜா இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications