அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.. செந்தாமரை வீட்டில் நடந்த ரெய்டு பற்றி ஆர்எஸ் பாரதி பேட்டி
சென்னை: ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் 11 மணி நேரத்திற்கு மேலாக நடந்த வருமான வரி சோதனையில் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் இரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் சபரீசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களை குறிவைத்து ஏராளமான வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

எதுவும் கைப்பற்றபடவில்லை
சுமார் 11 மணி நேரத்திற்கு மேல் நடந்த வருமான வரி அதிகாரிகள் சோதனை, இரவு 8 மணி அளவில் நிறைவு பெற்றது..இந்த சோதனையில், எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்எஸ் பாரதி
இது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குற்றமற்றவர்கள்
11 மணி நேரம் துருவி துருவி சோதனை நடத்தியும் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். சோதனையின் போது வீட்டு செலவுக்காக வைத்திருந்த ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது; அதற்கான வங்கி பரிவர்த்தனையை காண்பித்ததும் திரும்பிக் கொடுத்தனர். நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்த பிரதமர் மோடி, அதிகாரிகளுக்கு நன்றி" இவ்வாறு ஆர்எஸ் பாரதி கூறினார்.

கடும் பதிலடி
இதனிடையே இந்த ரெய்டில் எதுவும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளும் எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் உள்பட பல்வேறு திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடந்ததை கண்டு திமுகவினர் ஆவேசமடைந்துள்ளனர். திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் இப்படி ரெய்டு நடத்தப்படுவதை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்,












Click it and Unblock the Notifications