சென்னையில் பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்!
சென்னை: சென்னையில் பள்ளிச் சிறுமி லாரியில் அடிபட்டு இறந்த சம்பவம் தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவருக்கும் செந்தில்நாதன் என்பவருக்கும் திருமணமாகி ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் யாமினியின் கணவர் செந்தில்நாதன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, யாமினி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்துகொண்டு, தனி ஆளாக இருந்து மகனையும், மகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மகள் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளை யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேற்று காலை 8.15 மணியளவில், யாமினி தனது மகளை பள்ளியில் விடுவதற்காக பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, வாக்கின்றி தெரு சந்திப்பு வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை கவனிக்காத யாமினி, சட்டென வண்டியை பள்ளத்தில் விட்டார். அதனால் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் யாமினி நிலை தடுமாறி இடதுபுறமாக கீழே விழுந்தார்.
மேலும் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த அவரது மகள் வலதுபுறமாக சாலையில் கீழே விழுந்தார். அப்போது அந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின் சக்கரம் சிறுமி மீது ஏறி, இறங்கியது. இதில், அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த தாய் யாமினி, கண்முன்னே மகள் துடிதுடித்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியை இயக்கி வந்தது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பள்ளிச் சிறுமி லாரியில் அடிபட்டு இறந்த சம்பவத்தில் போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு 17(அ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள உயர்வு தற்காலிக நிறுத்தம் அல்லது பதவி இறக்கம் என இரண்டில் ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications