தேர்தல் முடியட்டும்..2 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000! எல்லாம் புதுவரவு..அதிகாரிகள் என்ன சொல்றாங்க?
சென்னை: தமிழக அரசின் சார்பில் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து இனி பெற இருக்கும் குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்க இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான் ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது என கூறலா. அப்போது அது தான் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது.

பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிட தகுந்த திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதுதான். அதனையே பின்பற்றி அதிமுக அறிவித்தாலும் திமுகவுக்கே மக்கள் ஆதரவு இருந்தது.
மகளிர் உரிமைத் தொகை: எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மகளிருக்கு உரிமை தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையே எதிர்க் கட்சிகளும் தங்கள் விமர்சனம் செய்யத் தொடங்கின. இதனிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழகத்தில் அமலக்க்கப்பட்டது. சில நிபந்தனைகளுக்குட்பட்டு மகளிர் உரிமை தொகை திட்டம் செயலுக்கு வந்தது.
நிபந்தனைகள்: அரசு ஊழியராக இருக்கக் கூடாது, வருமான வரி செலுத்துவகளுக்கு உரிமைத் தொகை கிடையாது போன்ற நிபந்தனைகள் காரணமாக சுமார் ஒரு கோடி பேர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தகுதி இருந்தும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பலர் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
பயனாளிகள்: தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மாதம் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஏறக்குறைய இரண்டரை கோடி குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் பாதி பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
புதிய விண்ணப்பங்கள்: இதற்கிடையே மக்களவை தேர்தல் நிறைவடைந்தவுடன் ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் என கூடுதலாக பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் சுமார் 2 லட்சம் பயனாளிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனக் கூறுகின்றனர் அதிகாரிகள்.
புதிய குடும்ப அட்டைகள்: 2023 ஜனவரி மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் இருந்த நிலையில் புதிதாக திருமணம் செய்தோர் மற்றும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோர் என சுமார் 2 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால் தற்போது தமிழகத்தில் ஏற்கனவே குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பலருக்கு குடும்ப அட்டை தயாராக இருப்பதாக குறுஞ்செய்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிந்ததும் அறிவிப்பு: புதிதாக விண்ணப்பித்தவர்கள் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேல் இருக்கும் நிலையில் ஜூன் மாதம் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படும். எனவே ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications