புயலால் நெட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு.. மீண்டும் வாய்ப்பு! யுஜிசி-க்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 6ம் தேதி நடைபெற்ற நெட் தேர்வை சிலர் தவறவிட்டிருந்தனர். எனவே அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து மறு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீதான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. எனவே மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக செல்போன் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில், மத்திய அரசின் டெட் தேர்வு குறித்து விமர்சனங்கள் மேலெழுந்தன.
அதாவது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான படிப்புகளுக்கு நடத்தப்படும் நெட் தேர்வினை மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு நடத்துகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
எனவே இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டதால், ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக அவையில் பேசிய அவர்,
“கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. ஆனால் மத்திய அரசு டெட் தேர்வை சென்னையிலே நடத்தி இருக்கிறது. நாட்டிலே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் துறையாக கல்வித்துறை இருக்கிறதா? என்று கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
யுஜிசியின் இந்த நடவடிக்கையால் பல்வேறு மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். எனவே யுஜிசி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த தேர்வை மீண்டும் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இக்கோரிக்கையை யுஜிசி தற்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதாவது கடந்த 6ம் தேதி தேர்வை தவறவிட்ட சென்னை, நெல்லூரை சேர்ந்தவர்கள் டிச.14ம் தேதி(நாளை) நடைபெறும் மறு தேர்வில் பங்கேற்கலாம் என்று யுஜிசி அறிவித்திருக்கிறது. இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, நெல்லூரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications