தமிழ் உட்பட 7 மொழிகளில்.. இனி பொறியியல் பாடங்களை கற்பிக்கலாம்.. ஏஐசிடிஇ ஒப்புதல்!
சென்னை: தமிழ் உட்பட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது.
தாய்மொழியில் பாடம் கற்பதே எளிதாக மனதில் பதியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் தாய் மொழி வழி கல்வியே வழிவகுக்கும் என்று உலகம் முழுக்க கல்வியாளர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். வளர்ந்த நாடுகளிலும் பொறியியல், மருத்துவ படைப்புகள் அவர்களின் தாய் மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.
ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எல்லாம் அவர்களின் தாய்மொழியிலேயே பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் தற்போது இந்தியாவில் பொறியியல் பாடங்களை பல்வேறு மாநில மொழிகளில் கற்பிக்கும் முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் எடுத்துள்ளது.

அனுமதி
அதன்படி தமிழ் உட்பட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், பெங்காலி, இந்திய, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இந்த புதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மொழி
ஏஐசிடிஇ வெளியிட்டு இருக்கும் இந்த அறிவிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அது தென்னிந்திய மொழிகள் எல்லாம் இதில் இடம்பெற்று இருப்பதுதான். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் இனி அந்தந்த மாநிலங்களில் பொறியியல் பாடங்களை எடுக்க முடியும்.

தமிழ் வழி
ஏற்கனவே தமிழ்வழி பொறியியல் படிப்புகள் உள்ள நிலையில், தற்போது தமிழ் மொழியில் பாடம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தமிழக பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ் மொழியில் ஆசிரியர்கள் பாடங்களை எடுக்க முடியும். இது மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளவும், பொறியியல் படிப்பின் தரம் உயரவும், படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் நல்ல புரிதலோடு இருக்கவும் வழி வகுக்கும்.

என்ன சொன்னார்
இது தொடர்பாக பேசிய ஏஐசிடிஇ சேர்மேன் அணில் சாகஸ்டிராபுத்தே, இந்தியா முழுக்க பொறியியல் பாடங்களை மாநில மொழிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று 500க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது 7 மொழிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 11 மொழிகளாக இது வரும் நாட்களில் உயர்த்தப்படும்.

வரவேற்பு
மாநில மொழிகளில் எளிதாக பாடங்களை எடுப்பதற்கான வழிகாட்டு முறைகள் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஏஐசிடிஇ எடுத்த இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக மாணவர்கள், மொழியாளர்கள், மக்கள் மத்தியில் ஏஐசிடிஇயின் முடிவை உற்சாகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications