தமிழகம் அதிர்ந்த சசிகலாவின்'எம்ஜிஆர் வீட்டு' தியானம்..'தர்ம யுத்த' தியானம்.. நினைவிருக்கா மக்களே!
சென்னை: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தீவிரமாய் தியானத்தில் இருந்து வருகிறார். பிரதமர் மோடியின் தியான வீடியோ, படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் புயலைக் கிளப்பிய சில தியானங்களை நினைவுபடுத்தி பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டு வந்தார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் பாறை மீது கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்துக்குள் தியானம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.

மோடியின் தியான வீடியோக்கள்: பிரதமர் மோடியின் தியானம் வெவ்வேறு கோணங்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு வகையான ஆசனத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. திரைப்பட காட்சிகளை விட சூப்பராக எடிட் செய்யப்பட்டு பிரதமர் மோடியின் தியான வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதுதான் சமூக வலைதங்களில் விவாதிக்கப்படும் பேசு பொருளாகி இருக்கிறது.
ஜெ. மறைவும் சில காட்சிகளும்: இந்த பின்னணியில் தமிழ்நாட்டின் சில 'தியான' சம்பவங்களையும் நமது வாசகர்களுக்காக நினைவுக்கு கொண்டு வருவோமே.. 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைகிறார்.. அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த முதல்வராகிவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலாவை ஒட்டுமொத்த அதிமுகவும் முன்னிலைப்படுத்துகிறது. சசிகலாவும் அதிமுகவின் பொதுச் செயலாளராகிவிட்டார்.
'தர்ம யுத்த' தியானம்: சசிகலாவின் அடுத்த இலக்கு முதல்வர் பதவி. இதனால் முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017-ல் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ், அப்போது தர்மயுத்தத்தைத் தொடங்கினார். இந்த தர்மயுத்தத்தின் உச்சகட்டமே, ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஓபிஎஸ் தியானம் இருந்ததுதான். அத்துடன் நிற்கவில்லை. ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் தாம் பேசியதாகவும் ஓபிஎஸ் பேட்டி அளிக்க.. ஓபிஎஸ் கார் மெரினா சாலை பக்கம் போனாலே.. அய்யோ தர்ம யுத்த தியானமா? என விடிய விடிய பத்திரிகையாளர்கள் திகலடித்து போயிருந்தனர்.
கானல் நீரான சசிகலா கனவு: இத்துடன் முடிவடைந்ததா 'தியான' புராணம்.. முதல்வர் பதவியை 'கொடுத்தவர்களே' பறித்துக் கொண்ட கோபத்தில் ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்த, சசிகலாவோ முதல்வர் பதவிக்காக கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து தனி யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் டெல்லி திருவிளையாடல் அரங்கேற்றம் நடந்தது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா 'தவமாய் தவமிருந்த' முதல்வர் பதவி கனவு கானல் நீராகிப் போனது. அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக்கப்பட்டார்.
எம்ஜிஆர் வீட்டு திடீர் தியானம்: சசிகலா நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுப் பார்த்தும் கிடைக்காத காரணத்தால் பெங்களூர் சிறையில் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு நாள், நேரம் பார்த்து குறிக்கப்பட சசிகலாவின் கார் முதலில் ஜெயலலிதாவின் சமாதிக்குப் போனது. அங்கு ஓபிஎஸ்-க்கு எதிராக, ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் ரேஞ்சுக்கு ஜெயலலிதா சமாதி மீது அடித்து சபதம் எடுத்தார் சசிகலா. அதற்கு அடுத்ததாக சசிகலாவின் கார் போனது எம்ஜிஆரின் ராமாபுரம் இல்லத்துக்குதான். அங்கு போன சசிகலா, எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார். அத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்ஜிஆர் உருவப் படம் முன்பாக அமர்ந்து திடீரென தியானத்தில் ஈடுபட்டார் சசிகலா. சசிகலாவின் இந்த திடீர் தியானத்தை தமிழ்நாடு எதிர்பார்க்கவில்லைதான்.
தீபாவின் தியானம்: அதே காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அரசியலில் இருந்தார். சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறே என்றார். அப்போது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கிய நிலையில் அதன் உறுப்பினர் படிவத்துடன் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு போனார் தீபா. அங்கு போய் அமர்ந்து அவரும் சிறிது நேரம் தியானம் செய்தார் என்பதும் சரித்திரம்.
மாதவனின் தியானம்: தீபாவின் கணவர் மாதவன். தீபாவுக்கும் மாதவனுக்கும் அவ்வப்போது மோதல் வெடித்ததும் உண்டு. அப்படியான ஒரு மோதல் காலத்தில் திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்குப் போய் மாதவனும் தியானத்தில் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி இருந்தார்.
பிரதமர் மோடியின் தியான தருணத்தில் நாமும் கடந்த கால தியானங்களை நினைவில் வைத்திருப்போம்.












Click it and Unblock the Notifications