விஜய் இப்படி பேசியது மகிழ்ச்சியாக இருக்கு.. வாழ்த்துறேன்.. வரவேற்கிறேன்! சீமான் சொன்னதை பாருங்க
சென்னை: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், இன்று விஜய்யின் கருத்தை வரவேற்று பேசினார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்யின் கருத்தை வரவேற்பதாக கூறிய சீமான், மாநில உரிமை வேணும்னு நான்தான் முதன்முதலாக புதுச்சேரிக்காக குரல் கொடுத்தேன். அதுக்கு அப்புறம் தான் ரங்கசாமியே போய் மனு கொடுத்தாரு. இப்போ நான் முன்வச்ச அந்த கோரிக்கை வலுப்பெறுகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருக்கிறது மகிழ்ச்சி.. வரவேற்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று திறந்த வெளி கூட்டத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். தமிழகத்தில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு முறையான அனுமதி கிடைப்பதில் தாமதமானதால் புதுச்சேரியில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அந்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டனர்.

புதுவையில் விஜய் பேச்சு
இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். விஜய் பேசுகையில், புதுச்சேரியில் இருக்கிற அரசோடு கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்ளவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
மாநில அந்தஸ்து கோரி
மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா கண்டுகொள்ளவில்லை, இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவே இல்லை என்று கேள்விப்படுகிறோம். இந்த புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டு பல முறை சட்டசபையில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த வருடமும் கூட மார்ச் மாதம் 27 ஆம் தேதி அன்று ஒரு தீர்மானம் போட்டார்கள். அது மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்புகிற 16-வது தீர்மானம்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில், விஜய்யின் இந்த கோரிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். சீமான் பேசியதாவது:-
விஜய் பேச்சுக்கு சீமான் வரவேற்பு
நான் இரண்டு நாளைக்கு முன்னாடி உளுந்தூர் பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினேன். சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நான் கூட்டம் நடத்தினேன். சீமான் இந்த மாதிரி கூட்டம் நடத்துறாரே என்று எத்தனை கட்சி தலைவரிடம் நீங்கள் கருத்து கேட்டீங்க..
கிளி ஜோசியம் மாதிரி இவருக்கு ஒரு சீட்டு எடுங்க என்று சொல்கிறீர்கள். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்கிறார் என்று சொல்கிறீர்கள். முதன் முதலில் அதை கேட்டது நான் தான். மாஹே, ஏனாம் வேணாம் மாநில உரிமை வேண்டும் என்று முதன் முதலில் முழக்கத்தை முன்வைத்தது நான் தான். அதுக்கப்புறம்தான் ரங்கசாமி மனு கொடுத்தார்.
தம்பி விஜய்யும் இதை சொல்வது மகிழ்ச்சி
அப்போ கூட நான் கேட்டேன்.. இத்தனை ஆண்டு காலம் நீங்க காங்கிரஸ் கட்சியில் இருந்தீர்கள். உங்க கட்சி ஆட்சியில் இருந்தது. நீங்களே ஆட்சியில் இருந்தீர்கள்.. கோரிக்கையை நிறைவேற்றியிருக்க கூடாது என்று கேட்டேன். நான் முன்வைத்த கோரிக்கை வலுப்பெறுவதில் மகிழ்ச்சி. அதிலும் தம்பி விஜய் அதே கருத்தை வலியுறுத்துவதில் மகிழ்ச்சி, நாங்கள் மாநில உரிமை வேண்டும் என கோருகிறோம்.
மாஹே, ஏனாம், வேண்டாம். எடுத்துக்க.. எனக்கு என் மாநில உரிமையை கொடு என்று கேட்கிறோம். அந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக அந்த கோரிக்கையை விஜய் வைத்து இருப்பதை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். தொடர்ந்து அந்த கோரிக்கையை நாங்கள் முன்னெடுப்போம்" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications