ஐபிஎஸ் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வாங்க.. மோதி பார்க்கலாம்.. திருச்சி எஸ்பிக்கு சவால் விட்ட சீமான்
சென்னை: திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும் என்றும், பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் சீமான் சவால் விடுத்து பேசினார். திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில் சீமான் இவ்வாறு பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருச்சி எஸ்பி வருண்குமாரை விமர்சித்து பேசினார். திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும். இந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு திமுக ஐடி விங்கில் வேலை பார்க்க வேண்டும். பெரிய வீரர் என்றால் ஐபிஎஸ் பதவியை ரிசைன் செய்துவிட்டு நேருக்கு நேர் மோத வேண்டும் என்று சீமான் பேசினார்.

சீமான் கூறியதாவது:- இரண்டு மாதமாக யாரோ எழுதுகிறார்கள். இதை உங்களால் தாங்க முடியவில்லை. அதுவும் நாங்க எழுதவில்லை. ஆனால் எங்களை 2 வருஷமாக எழுதுகிறார்கள். என் தங்கையை, என் உடன்பிறந்தவர்களை, என் மனைவியை, என் குடும்பத்தினரை எவ்வளவு கேவளமாக பேசி எழுதுகிறார்கள். அப்போ இதையெல்லாம் நீங்க தான் காசு கொடுத்து எழுத சொன்னிங்களா?.. நாங்க எவ்வளவு சகித்து கொண்டிருப்போம். நீங்க உங்க வேலையை சரியாக செய்தீர்களா? தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை ஐபிஎஸ் இருக்கிறார்கள்.
துரைமுருகன் கன்னியாகுமரியில் நான் பேசியதை தான் பேசியிருந்தார். புதிதாக அவர் பேசவில்லை. குற்றம் நிகழ்ந்தது குமரியில்.. அங்கும் காவல் நிலையங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு எல்லாம் விட்டுவிட்டு தென்காசி குற்றாலத்திற்கு சென்ற என் தம்பியை அங்கு கைது செய்து திருச்சியில் வைத்து சிறையில் அடைக்க என்ன தேவை இருக்கிறது?.. அப்போ அரசு எங்கே இருக்கிறது?.. யாரிடம் இருக்கிறது?..
எதுக்கு ஐபிஎஸ் படிக்க வேண்டும். திமுக ஐடி விங்கில் வேலை பார்த்தார் என்றால் ஏன் ஐபிஎஸ் வேலை பார்க்க வேண்டும். இந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு திமுக ஐடி விங்கில் வேலை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கின்ற போது உங்களுடன் மட்டும் எங்களுக்கு என்ன பகை இருக்கிறது? ஏன் பகை வருகிறது? நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள்.
நீங்கள் எங்களோட மோதி மோதுகிறதால் உங்கள் பெயர் அடிபட வேண்டும். உங்களை டிவியில் தினமும் சொல்ல வேண்டும். அதற்கு ஆசை என்றால், அப்படி பெரிய வீரர் என்றால் வாங்க நேருக்கு நேர் மோதுவோம். அதிகாரத்தில் இருந்து வழக்கு போடுவது எதற்கு. புதுசா வழக்க பார்க்க போகிறேறானா.. இல்லை.. என் மீது 138 வழக்குகள் இருக்கிறது. தமிழகத்தில் என் மீது வழக்கு இல்லா நீதிமன்றம் இல்லை, மாவட்டம் இல்லை.
என் மீது வழக்கு போட்டு எனக்கு என்ன ஆகப்போகிறது.. அவரவர் அவர்களது பொறுப்பு உணர்ந்து பணி செய்ய வேண்டும். நீங்க கூலிக்கு வேலை செய்றீங்க. நான் கொள்கைக்காக போராடுகிறேன். அதனால் இதுஎல்லாம் எங்களுக்கு சாதாரணம். பார்த்து விளையாடுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப தேவையில்லை எனக் கூறி கோர்ட்டு அவரை விடுவித்தது. இதையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. இதனையடுத்து தமது செல்போனில் இருந்துதான் திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார்.
சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர். இதையடுத்துதான், திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து திருச்சி எஸ்.பி வருண்குமார், தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், "எனக்கு எதிரான போஸ்ட்களை பதிய, தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன், என்று திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications