சட்ட சபையில் அவமதிப்பு எனப்பேசிய வேல்முருகனுக்கு ஆதரவாக வந்த சீமான்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசவையில், தமிழ் மொழி குறித்து, தமிழர் நலன் குறித்து பேச முடியாத சூழல் இருந்தால் அதற்கு எதற்கு இந்த அரசு என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தமிழக சட்டசபையில் தமிழர் நலன் குறித்து பேச முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை பேச விடாமல் தடுத்தது தொடர்பாக சீமான் இவ்வாறு கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழர்கள் நலன் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்தும், நீங்க அதிகப்பிரசங்கி தனமாக பேசுகிறீர்கள்.. நீ, வா, போ என்று அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியது குறித்தும் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

பெயர் தான் தமிழ்நாடு
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இந்த அரசு, இந்த அவை, தமிழுக்கும், தமிழர்களுக்குமான அவை இல்லை. அதற்கான இடம் இது இல்லை என்று இதை கேட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு தெரியும். இது நமக்கான நாடு இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெயர் தான் தமிழ்நாடு. தமிழுக்கும், தமிழர்களுக்கும் இது சுடுகாடு.
நம்மளுக்கு உயிர் இருக்கிறது. உணர்வு இருக்கிறது. உரிமை இருக்கிறது என்பதற்காக நம்மளை வைத்திருக்கவில்லை. நம்மிடம் ஓட்டு இருக்கிறது என்பதற்காக தான் வைத்திருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து வாங்கிட முடியும் என்பதால் அதை பற்றி கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் அரசவையில், தமிழ் மொழியை குறித்து, தமிழர் நலன் குறித்து, மொழி மீட்சி குறித்து, அதன் பாதுகாப்பு பற்றி குறித்து பேச முடியாத சூழல் இருந்தால் அதற்கு எதற்கு இந்த அரசு.. அதுவும் தமிழ்நாடு அரசு சட்டசபை என்று ஏன் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வருத்தம் அளிப்பதாக வேல்முருகன் பேச்சு
முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், "இன்று சட்டசபையில் தமிழர்கள் நலன் குறித்து என்னை பேசவிடாமல் தடுத்தனர். நான் பேசியதை புரிந்துகொள்ளாமல் திமுக உறுப்பினர்கள் பேசுகிறார்கள். அமைச்சர் சேகர்பாபுவும் என்னை பேசவிடாமல் தடுத்தார். புரிந்து கொள்ளாமல் என்னை முந்திரிக்கொட்டை என்று சொன்னார் சேகர்பாபு. வேல்முருகன் அவையில் பேசத் தெரியாமல் பேசுகிறார். அதிகபிரசிங்கித் தனமாக பேசுகிறார் என்று சொல்கிறார். ஆனால் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் சேகர்பாபு சொல்வதை கேட்டு என்னை அதிகப்பிரசிங்கி என்று விமர்சித்தது எனக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அதிமுக சொல்லும் புகாரை ஏற்றுக்கொள்ள முடியாமல் அமைச்சர் சேகர்பாபு இப்படி பேசுகிறார்" என்று வேல்முருகன் கூறினார்.
சட்டசபையில் என்ன நடந்தது?
தமிழக சட்டசபையில் இன்று ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு எனது உள்ளிட்டவை குறித்து திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார். அப்போது அவர் சபாநாயகர் அப்பாவு முன் சென்று உரத்த குரலில் பேசினார். இதில், அமைச்சர் சேகர்பாபு குறுக்கிட்டு பேசினார். இதனால் வேல்முருகன் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சபையில் எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், வேல்முருகன் பேசும் போது சபையில் அமர்ந்து கேட்பது வழக்கம்தான். ஆனால் சில நேரங்களில் அதிகபிரசங்கித்தனமாகவும் நடந்து கொள்கிறார். அமைச்சர்களை வேல்முருகன், கை நீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது என்பது ஏற்புடையது அல்ல; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து சபாநாயகர் அப்பாவுக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு வேல்முருகன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறுதி எச்சரிக்கை விடுப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications