"நீங்க யாரு முதல்ல.. உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு?" ஆன்லைன் ரம்மி.. ஆளுநர் மீது சீமான் ஆவேசம்
சென்னை: தலைநகர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக ஆளுநரைக் கடுமையாகச் சாடினார்.
நமது நாட்டில் சூதாட்டங்களுக்குத் தடை இருக்கிறது. அதேநேரம் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தேசியளவில் எந்தவொரு தடையும் இல்லை. இந்த விளையாட்டைப் பலரும் விளையாடி வருகின்றனர்.
முதலில் விளையாட்டு போல இதை ஆரம்பிக்கும் பலரும், ஒரு கட்டத்தில் இதற்கு முற்றிலுமாக அடிமையாகிவிடுகிறார்கள். கொரோனா சமயத்தில் பலரும் வீடுகளிலேயே முடங்கிய நிலையில், இதற்குப் பலரும் அடிமையானவர்கள்,

ஆன்லைன் ரம்மி
இதை விளையாடத் தொடங்கும் போது முதலில் சிறு தொகை வெல்வார்கள். இருப்பினும், கொஞ்சக் காலத்தில் பெரும் தொகையை இழப்பார்கள். விட்டதைப் பிடிக்கிறோம் என்று கடன் வாங்கி இறங்கும் போது, அதன் பாதிப்பு மோசமாக இருக்கிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட அனைத்து விதமான சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2020 நவம்பர் 21இல் அப்போதைய இருந்த அதிமுக அரசு, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. இருப்பினும், சென்னை ஐகோர்ட், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது. அதேநேரம் புதிய சட்டத்தைக் கொண்டு வரலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

48 பேர் தற்கொலை
இதற்கிடையே திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் கடந்தாண்டு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். இதையடுத்து கடந்த வாரம் இந்த அவசர சட்டத்தைத் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. இதுவரை இதில் ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உயிரிழப்பு
சமீபத்தில் திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

சீமான்
இது போன்ற சம்பவங்களைத் தொடராமல் இருக்க ஆளுநர் உடனடியாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "எல்லா வடிவங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஏற்கனவே, ஒரு முறை நிராகரித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட்டே தீர வேண்டும்,

யார் அவர்
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு எப்படி வருகிறது? முதலில் அவர் யார்? அவரது வேலை என்ன? அவரது அதிகாரம் என்ன? அந்த பதவி எதற்கு? எட்டு கோடி மக்கள் தேர்வு செய்த அரசு கொண்டு வரும் மக்கள் நலன் திட்டத்தையும், சட்டத்தையும் ஏற்க முடியாது, ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூற ஆளுநர் யார்.. இதெல்லாம் கொடுமை.. ஆளுநர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் ஆளுநர் நியமனமே அவசியமில்லை என்று தான் சொல்வேன்.

வீண் செலவு
என்னைக் கேட்டால் அரசு ஆளுநரை மதிக்காமல் செல்ல வேண்டும். அப்படிப் போனால், என்ன செய்து விடுவார்கள். ஆளுநருக்கு ஏக்கர் கணக்கில் மாளிகை, பாதுகாப்பு சம்பளம் தருவது எல்லாம் வீண் செலவு" என்றார். தொடர்ந்து ராகுல் காந்தி விவகாரம் குறித்துப் பேசிய அவர், "ராகுல் காந்தி பதவி தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. அதைவிட எல்லாம் பாஜகவினர் மிக மோசமாகப் பேசியுள்ளனர். அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை.." என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications