மட்டற்ற மகிழ்ச்சி..! ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 13 தம்பி-தங்கைகள் வெற்றிவாகை சூடிவர வேண்டும்.. சீமான்
சென்னை: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் வெற்றிவாகை சூடிவர வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டன. அதன்படி வரும் ஜூன் 23ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு இதில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்கில் 18 போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர்களும் அடக்கம். ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ரூ 3 கோடி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக வீரர்களை வாழ்த்தி நாம் தமிழர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் அறிக்கை
இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி கலந்து கொள்கின்றனர்.
மட்டற்ற மகிழ்ச்சி
அதேபோல தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி, தங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
வெற்றிவாகை
தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும், வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.