மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு.. தற்கொலை செய்து கொண்ட நாம் தமிழர் பெண் நிர்வாகி.. என்ன நடந்தது
சென்னை: நாம் தமிழர் பெண் நிர்வாகி ஒருவர் மகளுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அக்கம் பக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் புளியந்தோப்பு பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான பெண் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்தார். மேலும், வர்மக் கலைஞராகவும் அவர் இருந்தார். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

கடந்த 2012இல் அந்த பெண்ணுக்கும் அவரது முதல் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பெண் தனது மகளுடன் புளியந்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும், அவர் துணி, தேங்காய் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
யார் இவர்: இந்தச் சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புரசைவாக்கம் தக்கர் தெருவைச் சேர்ந்த வேறு ஒரு ஆணுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். முதலில் சில ஆண்டுகள் அவர்களுக்கு இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலேயே இருந்துள்ளது.
இருப்பினும், கடந்த 2020இல் அந்த இரண்டாவது கணவர் வந்தவாசியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், அவர்கள் குழந்தையுடன் வில்லிவாக்கம் பகுதியில் வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த விஷயம் புளியந்தோப்பை சேர்ந்த அந்த பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து அவர் தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
மன உளைச்சல்: இருப்பினும், இரண்டாவது கணவரும் சரி அவரது பெற்றோரும் சரி இதைக் கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அந்த பெண்ணை கைவிரித்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்த பெண் தனியாகவே வசித்து வந்துள்ளார். மேலும், இரண்டாவது திருமணமும் இப்படி முடிந்ததால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இரவு அந்த பெண் தனது 14 வயது மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமி பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணும் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் நடந்துள்ளது.
தற்கொலை: நேற்று முன்தினம் இரவு சூளையில் வசிக்கும் இந்தப் பெண்ணின் சகோதரி இவரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும், பல முறை கால் செய்தும் அவர் எடுக்காததால் அவரது சகோதரிக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக புளியந்தோப்பு பகுதிக்கு வந்துள்ளார். நேரில் வந்து பார்த்த போது கதவு உட்புறம் பூட்டியிருந்தது. பல முறை கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை.
இதையடுத்து சந்தேகமடைந்து அவர் புளியந்தோப்பு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே அந்த சிறுமி வாயில் நுரைதள்ளி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அருகிலேயே அவரது தாய் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இருவரது உடலையும் மீட்ட போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முதலில் அவரது இரண்டாவது கணவரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications