2016 முதல் 2024 வரை.. அதிமுக வாக்குகள் மீது கைவைக்கும் நாதக.. கவனம் கொடுப்பாரா எடப்பாடி பழனிசாமி?
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளை விடவும் அதிமுகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போவது நாம் தமிழர் கட்சி தான் என்று பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு ஏன் நாதக மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதில் திமுக மற்றும் அதிமுக முன்னணியில் இருந்தாலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் வரை தயாராக வைத்திருக்கிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சீமான் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் வேட்பாளர்கள் பலரும் தங்களின் தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். இம்முறை தவெகவும் களத்தில் இருப்பதால், 3வது இடத்தையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். அதேபோல் நாதக தனித்துப் போட்டி என்பதையும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தெளிவாக கூறி வருகிறார்.
இந்த நிலையில் சீமானின் வியூகம் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நாதக மிகப்பெரிய வளர்ச்சியை தேர்தல் அரசியலில் கண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 1.1 சதவிகிதம் தான். அப்போது திமுக, அதிமுக, மக்கள் நலக் கூட்டணி களத்தில் இருந்தன.
ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதாவது அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாதகவின் வாக்கு சதவிகிதம் 3.8ஆக அதிகரித்தது. அதாவது 3 ஆண்டுகளில் நாதக இரு மடங்கு வளர்ச்சியை எட்டியது.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாதகவின் வாக்கு சதவிகிதம் 6.7ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றியை நாதக முடிவு செய்துள்ளதை பார்க்கலாம். இதன்பின் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாதகவின் வாக்கு சதவிகிதம் 8.4ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தனை தேர்தல்களிலும் நாதக தனித்து களம் கண்டுள்ளது.
2006 மற்றும் 2009 தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு சதவிகிதத்தை கண்ட ஜெயலலிதா, உடனடியாக விஜயகாந்துக்கு நெருக்கமானவர்கள் மூலமாக அவரை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அதுபோன்ற நடவடிக்கை எதையும் எடப்பாடி பழனிசாமி இதுவரை மேற்கொள்ளவில்லை. தவெக கூட்டணிக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, நாதகவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் 2016க்கும் பின் திமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், நாதக பெற்று வரும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளாகவே கருதப்படுகிறது. இதனால் சட்டசபைத் தேர்தலில் நாதகவின் வாக்குகள் அதிமுகவுக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications