விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி! எம்ஜிஆர் என்டிஆர்..3 எழுத்து சூப்பர் ஸ்டார்களை பந்தாடிய ஆளுநர்கள்
சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் இன்னும் பல்வேறு விவாதங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, "பெரும்பான்மை நிரூபித்தாலும் அரசியல் ஆபத்து முழுமையாக நீங்கிவிடாது" என்ற கருத்தை சில அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். இதற்காகவே கடந்த காலத்தில் சினிமா உலகில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரான என்.டி.ராமாராவும், எம்.ஜி.ஆரும் சந்தித்த நெருக்கடிகள் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. இந்நிலையில், விஜய்க்கும் அது நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். ஏனென்றால் கடந்த கால வரலாறு அப்படி..
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் மதிமுக உறுப்பினர்கள் இருவரும் அவைக்கு வராத நிலையில், 230 உறுப்பினர்கள் அவையில் இருந்த நிலையில், திமுகவின் வெளிநடப்புக்குப் பின், வாக்கெடுப்பு நடைபெற்றபோது அவையில் 171 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.
விஜய் அரசு
அதில் 144 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும், 5 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். இந்த வெற்றியின் மூலம் விஜய் அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தாலும் விஜய்க்கு தற்போதைக்கு சிக்கல் இல்லை..ஆனால், எப்போதும் இல்லைஎன்றும் சொல்ல முடியாது. காரணம் கடந்த கால அரசியல் வரலாறு அப்படி. பெரும்பான்மை கொண்ட அரசுகளையே கலைத்து அதிரடி காட்டியுள்ளனர் ஆளுநர்கள். இதில், என்டிஆர், எம்ஜிஆர் கூட தப்பியதில்லை என்பது வரலாறு.. அதில் முக்கியமாக பேசப்படுவது ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ் சம்பவம்.
என்டிஆர்
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்த என்.டி.ராமாராவ், 1982-ல் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். வெறும் சில மாதங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார். அது இந்திய அரசியலில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் 1984-ல் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, கட்சிக்குள் கிளர்ச்சி வெடித்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த நடெண்ட்லா பாஸ்கர ராவ், தமக்கே பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி ஆளுநரிடம் ஆதரவு பட்டியல் கொடுத்தார்.
பதவி நீக்கம்
உடனடியாக அந்நாள் ஆளுநர் ராம் லால், என்.டி.ஆர் அரசை பதவி நீக்கம் செய்து பாஸ்கரராவை முதலமைச்சராக பதவியேற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய என்.டி.ஆர், தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று போராட்டம் நடத்தினார். "பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும்; ஆட்சியை நேரடியாக கலைக்க முடியாது" என்று அவர் வலியுறுத்தினார்.
எம்ஜிஆர்
இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு உருவானது. ஆந்திராவில் போராட்டங்கள் வெடித்தன. இறுதியில் மத்திய அரசு பின்னடைந்தது. ஆளுநர் மாற்றப்பட்டதுடன், என்.டி.ராமாராவே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அதேபோல் தமிழ்நாட்டிலும் எம்.ஜி.ஆர் சந்தித்த அரசியல் சிக்கல் வரலாற்றில் முக்கியமான ஒன்று. 1977-ல் அதிமுகவை வெற்றிபெறச் செய்து முதலமைச்சரான எம்.ஜி.ஆர், மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்தார். ஆனால் 1980 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பிரதமர் இந்திரா காந்தி
இதனைத் தொடர்ந்து, "மக்களவைத் தேர்தலில் தோற்ற அரசு மாநிலத்தில் தொடரக்கூடாது" என்ற காரணத்தை முன்வைத்து, அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆர் அரசை கலைத்தது. தமிழ்நாட்டுடன் சேர்த்து பல மாநில அரசுகளும் அப்போது கலைக்கப்பட்டன. அப்போது எம்.ஜி.ஆர் கேட்ட ஒரு கேள்வி தமிழக அரசியலில் வரலாற்றாக மாறியது. "நான் என்ன குற்றம் செய்தேன்?" என்ற அந்த ஒரு வரி மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆளுநர் அதிகாரம்
அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் எம்.ஜி.ஆர்.
இந்த வரலாறுகளை தற்போது பலர் மீண்டும் நினைவுகூருகின்றனர். குறிப்பாக சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சரான என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், விஜய் ஆகிய மூவரும் ஆட்சி அமைக்கும் கட்டத்தில் அரசியல் சிக்கல்களை சந்தித்திருப்பது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் சூழல், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சட்ட நடைமுறைகள் கடந்த காலத்தை விட பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளன என்பதையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications