முதலில் நம்பலை.. 104க்கு போன் போட்டேன்.. அப்பதான் தெரிஞ்சது பேசினது ஸ்டாலின்னு.. நுங்கம்பாக்கம் பெண்
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 8 நாட்கள் ஆன நிலையில் இந்த காலகட்டத்தில் ஸ்டாலின் அதிரடியான சில சம்பவங்களை செய்து வருகிறார்.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதும் ஆக்ஸிஜன் கிடைப்பதும் அரிதாகியுள்ளது.
இதனால் நோயாளிகளுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள், உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ ஆலோசனை உள்ளிட்டவை குறித்து அறிய தமிழக அரசால் கட்டளை மையம் அமைக்கப்பட்டது. இதற்கு ஆங்கிலத்தில் வார் ரூம் என அழைக்கப்படுகிறது.

செயல்படும் விதம்
சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் இந்த வார் ரூம் செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் திடீரென முதல்வர் ஸ்டாலின் இந்த வார் ரூமிற்கு நேரடியாக வந்தார். அப்போது அங்கு இருக்கும் அலுவலர்களிடம் அது செயல்படும் விதத்தை கேட்டறிந்தார்.

104 தொலைபேசி எண்
அப்போது 104 என்ற வார் ரூமின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு பெண் அழைத்தார். நான் ஸ்டாலின் பேசுறேன், நீங்கள் யாரும்மா என கேட்டார். மறுமுனையில் பேசிய பெண் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க உதவி கேட்டார்.

மூச்சுத்திணறல்
வானகரத்தில் இருந்து வந்த அந்த பெண்ணின் அழைப்பை அட்டென்ட் செய்த ஸ்டாலின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி செய்து தர உத்தரவிட்டார். அதே போல் நுங்கம்பாக்கத்திலிருந்து அர்ச்சனா தனது உறவினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து வார்ரூமுக்கு தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அந்த பெண்ணின் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

பதறாதீங்க
இதுகுறித்து அர்ச்சனா தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் நான் போன் செய்தவுடன் மறுமுனையில் ஸ்டாலின் பேசுறேன் என்றார். எனக்கு படபடப்பு ஏற்பட்டது. உடனே அவரிடம் எனது குறையை சொன்னேன். பதற்றப்படாமல் குறையை சொல்லுங்கள் என கேட்டார்.

மகிழ்ச்சி
மூச்சுத்திணறல் இருப்பதால் ஆக்ஸிஜன் படுக்கை வேண்டும் என்றேன், உடனே ஏற்பாடு செய்து தந்தார் என்றார் அந்த பெண். பேசியது அவர்தானா என்பதை அறிந்து கொள்ள மீண்டும் அந்த எண்ணிற்கு போன் செய்து, இப்போது என்னிடம் ஒருவர் பேசினார் அவர் யார் என கேட்டேன், அதற்கு மறுமுனையில் இருந்தவர், "Chief minister of Tamilnadu" என்றார். எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை என்றார் அந்த பெண்.












Click it and Unblock the Notifications