தொடர் அவமானம்.. பிரச்சார வாகனமும் பஞ்சராக்கப்பட்டது.. ஓபிஎஸ்ஸுக்கு அனுதாப அலை கிடைக்குமா
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு வந்த ஓ பன்னீர் செல்வத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என ஓபிஎஸ் விரும்புகிறார். ஆனால் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விரும்புகிறார்கள். இது குறித்து எடப்பாடி எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாக கெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ஒற்றைத் தலைமை - இரட்டை தலைமைக்கு இடையே பெரும் போராட்டம் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை இந்த பொதுக் குழுவில் நிறைவேற்ற போவதை அறிந்த ஓபிஎஸ் கடுமையாக எதிர்த்தார்.

ஓபிஎஸ் வெற்றி
இந்த எதிர்ப்பிலும் கடைசி நிமிடத்தில் ஓபிஎஸ் வெற்றியும் பெற்றார். இந்த வெற்றியின் நிம்மதி பெருமூச்சுடன் அதிமுக பொதுக் குழுவுக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தை நிர்வாகிகள் உள்ளே கொண்டு வர அனுமதி மறுத்தனர்.

துரோகி
ஓபிஎஸ்ஸை துரோகி என முழக்கமிட்டனர். மேலும் திரும்பி போ என ஓபிஎஸ் வாகன ஓட்டுநரிடம் நிர்வாகிகள் மல்லுக்கட்டினர். இதையடுத்து ஓபிஎஸ் நேராக ஒரு அறையில் அமர்ந்திருந்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு விழா மேடைக்கு ஓபிஎஸ்ஸும் வந்திருந்தார்.

கூச்சல் குழப்பம்
அங்கு கீழே அமர்ந்திருந்த நிர்வாகிகள் கூச்சலிட்டனர். மேலும் தீர்மானங்களை ஓபிஎஸ் முன்மொழிந்த போதும் நிர்வாகிகள் கூச்சலிட்டனர். மேலும் மேடையில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் தனித்தனியே அமர்ந்திருந்தார்கள். பின்னர் அதிமுக பொதுக் குழு இந்த தீர்மானங்களை நிராகரிக்கிறது என சிவி சண்முகம் ஆவேசமாக பேசினார்.

நிரந்தர அவைத்தலைவர்
பின்னர் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை கோரிக்கையை சிவி சண்முகம் முன் வைத்தார். இதையடுத்து மீண்டும் பொதுக் குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி கூடுகிறது என அறிவித்தார். இதை கண்டித்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.

தண்ணீர் பாட்டில்
வெளியே வந்த ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதையடுத்து அவரது பிரச்சார வாகனமும் பஞ்சர் செய்யப்பட்டு இருந்தது. அவரை பேச கூட விடவில்லை. இவ்வாறு தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்றும் பாராமல் ஓபிஎஸ்ஸை நிர்வாகிகள் அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி.ய போது அவரது வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவருககு அனுதாப அலையும் வீசியது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது ஓபிஎஸ்ஸுக்கு அனுதாப அலை கிடைக்குமா என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications