ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி.. இரட்டை இலை முடங்குமா? ஓபிஎஸ் பரபர பேச்சு
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாகத் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.
அங்குக் காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணி ஏற்கனவே தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

ஓபிஎஸ்
இருப்பினும், அதிமுக தரப்பில் இன்னும் தெளிவான முடிவு இல்லை. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், இருவரும் வேட்பாளரைக் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் ஓ பன்னீர் செல்வம் தாங்கள் போட்டியிடுவோம் என்றும் அதேநேரம் பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு வழிவிடுவோம் என்றும் அறிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் சென்னை எழும்பூரில் ஆலோசனை நடத்தினார்.

போட்டியிடுவது உறுதி
இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசி. ஓ பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே நிர்வாகிகள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரட்டை இலை எங்களுக்கே
இணை ஒருங்கிணைப்பாளர் ராஜினாமா செய்துவிட்டதால், ஒருங்கிணைப்பாளருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்ற அவர், இதனால் எங்களுக்கே இரட்டை இலை சின்னம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். மேலும், வேட்பாளர் தேர்வுக்கான விருப்மனு விநியோகம் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதைத் தொடர்ந்து விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்

எப்படி
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "அதிமுகவில் சட்ட விதிகள் படி நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டோம்.. அது தான் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இப்போதும் அதிகாரப்பூர்வமான பதவியாக உள்ளது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருமே கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இப்போது அவர் ராஜினாமா செய்துவிட்டதால்.. இப்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்ற பதவி மட்டுமே உள்ளது. எனவே, எங்களுக்கே இரட்டை இலை கிடைக்கும்.

பாஜக
பாஜக கடந்த இரு மக்களவை தேர்தல்களில் வென்று தேசிய அளவில் ஆளும் கட்சியாக உள்ளது. உலக அரங்கிலும் பிரதமர் மோடி பல முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசி வருகிறார். நமது நாட்டின் பெருமையை உலக அரங்கிற்கு நிறுத்தும் பொறுப்பில் பிரதமர் மோடி உள்ளார். உலக தலைவர்கள் வரிசையில் அவர் முக்கிய இடத்தில் உள்ளார். எனவே, அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இருக்கும் என்பதாலேயே இப்படிச் சொன்னோம்.. இன்னும் சில நாட்களில் அவர்கள் நிலைப்பாடு தெரிந்து விடும்.

இணைவது முக்கியம்
முன்பு ஜெ அணி, ஜா அணி என இருந்த போதும் இரு தரப்பும் நிர்வாகிகளை நியமித்தனர். அப்போதும் கட்சியின் நலன் கருதி இரு தரப்பும் இணைந்தனர்.. அதிமுக உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கட்சியை இணைக்க வேண்டும். ஒன்றிணைந்தால் தான் நல்லது என்றே கட்சியின் தொண்டர்கள் கருதுகிறார்கள்.. எடப்பாடியின் செயல்பாடு பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது என்ற பாடலை போல இருக்கிறது. எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் இதேபோலத் தான் இருக்கும்.

தவறில்லை
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு கேட்டுச் செல்வதில் எந்தவொரு தவறும் இல்லை. கூடிய விரைவில் வேட்பாளர் அறிவிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் ஓரிரு நாட்களில் விருப்ப மனு பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.. அதைத் தொடர்ந்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.. இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் மாபெரும் வெற்றியை நிச்சயம் பெறுவோம்.." என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications