சென்னையில் அமித் ஷா.. ஓபிஎஸ்சுக்கு ஹால் டிக்கெட்டு.. எடப்பாடி ஹிட் விக்கெட்டு.. அனல் பறக்கும் அதிமுக
சென்னை: சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவை, பிற்பகல் 2.30 மணியளவில் ஓ பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் இந்தியா சிமெண்ட்ஸ் 75வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் பாஜக அலுவலகம் வருகிறார். பின்னர் பாஜக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஓபிஎஸ் - அமித் ஷா சந்திப்பு
இதனிடையே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓபிஎஸ் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இபிஎஸ் புறக்கணிப்பு?
நேற்று பிரதமர் மோடி மதுரை வந்த போது எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இருவரும் ஒன்றாக சந்தித்தனர். இதனால் விரைவில் அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமித் ஷாவை சந்திக்கும் நேரம் இதுவரை முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிடம் புறக்கணிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இபிஎஸ் செயல்பாடுகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இருவரையும் பாஜக மட்டுமே ஒன்றிணைக்க முடியும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருந்தார். சட்டசபையில் கூட ஓபிஎஸ் அருகில் அமர்வதை விரும்பாமல், சட்டசபை கூட்டத்தொடரை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்று திட்டமாக எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார்.

பாஜகவின் திட்டம்
ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க இருவரும் ஒன்றாக சென்றது அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக மேலிடம் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதால், இருவரையும் சமாதானம் செய்ய பாஜக தரப்பில் அறிவுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஓபிஎஸ்-க்கு மட்டும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications