அடுத்தடுத்து வேகம்.. திடீரென ஜிகே வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு.. அடுத்த மீட்டிங் எங்கே தெரியுமா?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜிகே வாசனை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அடுத்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனக்கு அணிக்கு ஆதரவு கோருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடி தூள்! அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கட்டாயம் - கேரள அரசு 'வாவ்' அறிவிப்பு!
ஓபிஎஸ் அணி போட்டி
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். 2026ம் ஆண்டு வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தகுதியை பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது. அதனால் இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவோம்.
பாஜகவுக்கு ஆதரவு
கூட்டணிக் கட்சியினர் எங்களுடனும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவோம். ஆனால் ஒருபோதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தான் எங்களின் நிலைப்பாடு. அதிமுகவின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன். இப்போதும் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் என்று தெரிவித்தார்.
ஜிகே வாசனை சந்திக்கும் ஓபிஎஸ்
ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அணிக்கு ஆதரவு திரட்ட ஓபிஎஸ் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக இன்னும் சற்று நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனை சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜிகே வாசன் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் - அண்ணாமலை சந்திப்பு
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்பதோடு, பாஜகவின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இரு வேட்பாளர்கள் களமிறங்கினால், பாஜகவும் வேட்பாளரை களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.